செய்திகள்

குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2018-02-14 17:16 GMT   |   Update On 2018-02-14 17:16 GMT
நீலகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை, காவல்துறை கொண்ட சைல்டு லைன் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இது அருவங்காட்டில் உள்ள கிராமிய அபிவிருத்தி இயக்க பவனில் இயங்கி வருகிறது.

இதன் மூலம் கடந்த 2½ ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் 48 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் 33 குழந்தை திருமணங்கள் சமூக நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இருதரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. பாலியல் ரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து 12 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் குழந்தை திருமணம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கும், 21 வயது பூர்த்தியாகாத ஆணுக்கும் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்திடவும், குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்கும் வகையிலும், குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது குழந்தை திருமணம் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குழந்தை திருமணத்துக்கு ஏற்பாடு செய்பவர்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள், பெண் வீட்டார், மணமகன் வீட்டார், குழந்தை திருமணம் என தெரிந்தும் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் திருமண மண்டப உரிமையாளர்கள், அழைப்பிதழ் அச்சடித்து கொடுக்கும் அச்சக உரிமையாளர்கள், அந்த திருமணத்தில் கலந்து கொண்டோர் என அனைவரின் மீதும் குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி ஜாமீனில் வர முடியாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்யப்படும்.

குழந்தை திருமணம் குறித்து தகவல் கிடைத்தால் தாமதமின்றி சைல்டு லைன் 1098 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அல்லது அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews
Tags:    

Similar News