செய்திகள்

சேரன்மகாதேவி அருகே சொத்து தகராறில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற பேரன்

Published On 2018-01-23 12:35 GMT   |   Update On 2018-01-23 12:35 GMT
சேரன்மகாதேவி அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேரன் அரிவாளால் வெட்டி விட்டு ஓடியதால் தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சேரன்மகாதேவி:

நெல்லையை அடுத்த சேரன்மகாதேவி அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 63). இவரது பேரன் சிவபெருமாள் (27). இவர்கள் இருவருக்கும் நேற்று மாலையில் சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவபெருமாள் மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

தலையில் பலத்த வெட்டு காயமடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் மகாலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவபெருமாளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சேரன்மகாதேவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் தங்கபாண்டி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையே சேரன்மகாதேவியில் மீண்டும் கொலை சம்பவம் நடந்துவிட்டது என அப்பகுதியில் புரளி ஏற்பட்டது.

இதனால் சேரன்மகாதேவி பஸ் நிலைய வியாபாரிகள் இரவு 8 மணியளவில் கடைகளை அடைத்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்திற்கு பின்னர்தான் கொலை நடந்தது சேரன்மகாதேவியில் அல்ல புதுக்குடியில் சொத்து பிரச்சினையில் முதியவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பரபரப்பு முடிவுக்கு வந்தது.

எனினும் இரவு நேரங்களில் சேரன்மகாதேவியில் கொலை நடந்து விட்டது என கடந்த 2 நாட்களாக புரளி பரப்பப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே இருந்து வருகின்றனர்.
Tags:    

Similar News