செய்திகள்
மெரினா கடற்கரை கூட்டத்தில் மாயமான 50 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
காணும் பொங்கல் உற்சாக விளையாட்டு மிகுதியில் மாயமான 50 குழந்தைகளை கையில் ஒட்டப்பட்டிருந்த அடையாள பேட்ஜ் மூலம் போலீசார் அடையாளம் கண்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை:
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் நேற்று அதிகம் காணப்பட்டது. குடும்பம், குடும்பமாக மக்கள் கடற்கரையில் குவிந்தனர். கூட்ட நெரிசலில் குழந்தைகள் தொலைந்து போனால், அவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் புதிய முயற்சியை கடந்த சில ஆண்டுகளாக கையாண்டு வருகின்றனர்.
அதன்படி குழந்தைகள் கையில் பெற்றோர் பெயர், முகவரி, செல்போன் விவரங்களை பேட்ஜ் போன்று போலீசார் ஓட்டினர். இந்நிலையில் காணும் பொங்கல் உற்சாக விளையாட்டு மிகுதியில் 50 குழந்தைகள் பெற்றோரை விட்டு தொலைந்து போயினர். பின்னர் பெற்றோரை தேடி கண்ணீருடன் அலைந்தனர். பெற்றோரும் பரிதவிப்புடன் குழந்தைகளை தேடினர்.
நேற்று மாயமான 50 குழந்தைகளை கையில் ஒட்டப்பட்டிருந்த அடையாள பேட்ஜ் மூலம் போலீசார் அடையாளம் கண்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடந்த ஆண்டு 151 குழந்தைகள் மாயமாகி மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் மேற்கொண்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளால் மெரினாவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி காணும் பொங்கல் கொண்டாட்டம் அமைதியாக முடிந்தது. #tamilnews