தெலுங்கானாவில் தமிழிசை சவுந்தரராஜன் 10 நாட்கள் பிரசாரம்
- கட்சி மேலிட உத்தரவின் பேரில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
- ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் 10 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக தெலுங்கானா மாநிலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக பணியாற்றி வந்தார்.
அரசு திட்டங்கள் மற்றும் மக்களை நேரடியாக சந்திப்பதில் அவர் தீவிரம் கவனம் செலுத்தினார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலுங்கானாவில் செல்வாக்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கட்சி மேலிட உத்தரவின் பேரில் அவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகை ஜெயப்பிரதா ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என நேற்று தெரிவித்தார். வெளிமாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டி வருவதால் அங்குள்ள பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.