செய்திகள்

ஆர்.கே நகர் முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்

Published On 2017-12-25 09:27 GMT   |   Update On 2017-12-25 09:27 GMT
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என புகாரளிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.
சென்னை:

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, டி.டி.வி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களை நீக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தினகரன் பக்கம் உள்ள மாவட்ட செயலாளர்களான வெற்றிவேல், கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன், முத்தையா, ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோரின் கட்சி பதவிகள் பறிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்த பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

ஆர்.கே நகர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம். எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் தினகரன் தரப்புக்கு செல்லவில்லை எங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள். எங்களுக்குள் எந்த பூசலும் இல்லை. தினகரன் அரசியலுக்கு வருவதற்கு 18 வருடங்கள் முன்பே அரசியலுக்கு வந்தவன் நான். அரசியலில் தினகரனை விட மூத்தவன் நான்.

தினகரன் ஒரு மாயமான், மற்றவர்களை விட தினகரனை பற்றி எனக்கு நன்றாக தெரியும். கட்சியில் ஏற்ற, இறக்கங்கள் வருவது சகஜம், பின்னடைவுகளை சரிசெய்து அ.தி.மு.க வலுவாக செயல்படும். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
Tags:    

Similar News