search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ.பன்னீர் செல்வம்"

    • எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்ற கேள்வி எழுந்தபோது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே சாய்ந்தார்கள்.
    • சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்த சபரீசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து இருவரும் பேசினார்கள்.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வத்தை தி.மு.க.வின் பி டீம் என்று ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வினர் விமர்சித்து வருகிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் வகையில் தி.மு.க. அரசை பலமுறை அவர் பாராட்டி இருக்கிறார். சட்டசபையிலேயே கருணாநிதியையும் பாராட்டி இருக்கிறார்.

    இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்ற கேள்வி எழுந்தபோது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே சாய்ந்தார்கள்.

    இந்த நிலையில்தான் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்த சபரீசனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து இருவரும் பேசினார்கள். இருவரும் அருகருகே அமர்ந்து போட்டியையும் பார்த்தனர்.

    இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த வீடியோ வெளியானதும் ஓ.பன்னீர்செல்வத்தை கலாய்த்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து டி.ஜெயக்குமார் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    பூனைக்குட்டி வெளியே வந்தது. சபரீசனுடன் ஓ.பி.எஸ். சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக தன்னை மாற்றுமாறு அந்த நிறுவனத்துடன் சண்டையும் போட்டுள்ளார் என்றும் கலாய்த்துள்ளார்.

    • அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி ஓ.பன்னீர்செல்வம் தீவிர யோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
    • ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் சிவில் வழக்கை மட்டுமே தங்கள் கடைசி ஆயுதமாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் நம்பி இருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமானது. இதை தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    கடைசி வரை சட்டப் போராட்டம் நடத்தியும் இப்படி ஆகிவிட்டதே என்ற விரக்தியில் ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்.

    அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி ஓ.பன்னீர்செல்வம் தீவிர யோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

    இன்று ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை ராணிமேரி கல்லூரி முன்பு அமைந்து உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்தார்.

    அதன் பிறகு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தற்போதைய நிலையில், ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் சிவில் வழக்கை மட்டுமே தங்கள் கடைசி ஆயுதமாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் நம்பி இருக்கிறார்கள்.

    ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதாவது பொதுக்குழு கூட்டியதை அவர் எதிர்க்க முடியாது. மற்றபடி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அவர் எதிர்க்கலாம். அதோடு தேர்தல் ஆணையத்திலும் முறையிடலாம் என்று கூறியிருக்கிறது. இதைத்தான் தற்போது ஓ.பன்னீர் செல்வம் முழுமையாக நம்பி இருக்கிறார்.

    ஏற்கனவே சிவில் கோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் விதி முறைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதை மீறி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டுகிறார்.

    அது விதிமுறைகளுக்கு எதிரானது என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையில்தான் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டிலேயே மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த டிவிஷன்பெஞ்ச் பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவைத்தான் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

    சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட மூல வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. எனவே, அந்த வழக்கின் முடிவை ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்க்கிறார். எனவே, கட்சி நடத்த முடியாத நிலை இருப்பதால் அந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி முறையிட அவர் முடிவு செய்துள்ளார்.

    அடுத்ததாக தேர்தல் ஆணையத்தையும் அணுக முடிவு செய்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் நீடிக்கிறது. பொதுக்குழு தீர்மானங்களையும் பரிசீலித்து வருகிறோம். அதை இன்னும் ஏற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து இருந்தது. எனவே சிவில் வழக்கு முடிவு வரும்வரை அதே நிலையே தொடர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கவும் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து இருக்கிறார்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முறையிட இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இந்த முட்டுக்கட்டையை போட திட்டமிட்டுள்ளார்.

    • தி.மு.க. அரசின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    1971-76-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை எட்டு முறை நிறுத்தி வைத்த அரசு தி.மு.க. அரசு. இதனை சரி செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கி அவர்களை பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர்.

    தற்போதைய அகவிலைப்படி உயர்வு ஆணைகள் உரிமையை நிலைநாட்டுவது போல் இல்லை. 'திராவிட மாடல்' என்பதற்கேற்ப தி.மு.க. அரசு எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது தான் கொடுக்கும் என்ற அதிகாரப் போக்கினை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உணர்த்துவது போல் அமைந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். வகுத்த கொள்கையிலிருந்து, புரட்சித் தலைவி அம்மா கடைபிடித்த முறையிலிருந்து வேறுபட்டு புதிய முறையைக் கடைபிடிப்பது என்பது எதிர்காலத்தில் அகவிலைப்படி உயர்வை அபகரிப்பதற்கான, தாமதப்படுத்துவதற்கான ஏற்பாடோ என்ற அச்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் நிலவுகிறது.

    தி.மு.க. அரசின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு மாற்றியமைக்கப்பட்டதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இனி வருங்காலங்களில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் போதெல்லாம் அதே தேதியிலிருந்து மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசினுடைய நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
    • அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது.

    மேற்படி நிலைமைக்கு காரணம் பள்ளிக் கல்வித்துறைக்கும், நிதித்துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு இருந்திருந்தால், மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாத சூழ்நிலை தவிர்க்கப்பட்டு இருக்கும். தி.மு.க. அரசினுடைய நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாத அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் உடனடியாக சம்பளம் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை வேப்பேரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
    • பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தகவல்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக பொருளாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா?
    • உதயநிதி அமைச்சர் பதவி பெற போகிறார், இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?.

    திருப்பரங்குன்றம்:

    தி.மு.க. அரசை கண்டித்து மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியுள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்சார கட்டணம் 53 சதவீதமும், வீட்டு வரி 100 சதவீதம் ஏற்றி விட்டார்கள்.

    இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். மேலும் அவர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி பெற போகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைந்திருக்கும் போது முதலமைச்சர் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்?.

    செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா, ஜெயலலிதா கொண்டு வந்த மினி கிளினிக்கை கொண்டு வருவாரா, பெண்களுக்கான மிக்சி, கிரைண்டர் கொடுக்கப் போகிறாரா?.  பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு போய் விட்டால் அண்ணா தி.மு.க.வுக்கு தொல்லை நீங்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். 

    • ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நிரந்தரம் சட்டம் கொண்டு வந்தவர் மோடி என ஓ.பன்னீர் செல்வம் பேட்டியில் பேசினார்.
    • தற்போது சில அமைப்புகள் சில சந்தேகங்களை எழுப்புகின்றனர்

    அவனியாபுரம்

    சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தபோது அன்று தமிழக அரசு சார்பில் முதல்வராக இருந்த நான், பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். அவரின் உதவியால் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்கின்ற வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம் தற்போது வரை அப்படியே இருக்கிறது.

    தற்போது சில அமைப்புகள் சில சந்தேகங்களை எழுப்புகின்றனர். அதற்கு தமிழக அரசு தான் உரிய பதில்களை அளிக்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் கோரிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், ஐயப்பன் எம்.எல்.ஏ., முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையத்துரை மாரி, ஒத்தக்கடை பாண்டியன், தேன் சுகுமாறன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா, மார்க்கெட் ராமமூர்த்தி, உசிலை பிரபு, ஆரைக்குடி முத்துராமலிங்கம் உள்பட பலர் இருந்தனர்.விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அருகில் கோபாலகிருஷ்ணன் எம்.பி. உள்பட பலர் உள்ளனர்.

    • ஈபிஎஸ், ஓபிஎஸ்-சை டெல்லி இணைத்து வைத்தது தவறான முடிவு.
    • தவறை உணர்ந்து என்னை பார்க்க வந்த ஓபிஎஸ்-சை நட்பு ரீதியாக சந்தித்தேன்.

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சதி செய்வதாக அமமுக. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டி உள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது:

    நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது உதவிகரமாக இருந்த கட்சியை,(பாஜகவை) இன்றைக்கு, உதாசீனபடுத்தி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் அவர்கள்(பாஜக) ஜெயிச்சா என்ன, தோற்றால் என்ன, இன்னும் சொல்லப் போனால் பாஜக தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வரவிடாமல் செய்வதற்கான வேலைகளில் இறங்க சதி செய்கிறார்கள்.

    2017 ஆண்டு என்னை பன்னீர் செல்வம் சந்தித்த போது, முதலமைச்சராக ஆதரவு அளித்தேன். ஏனென்றால் அவர்( எடப்பாடி பழனிசாமி) தப்பான பாதையில் போகிறார் என்று தெரிவித்தேன். பன்னீர் செல்வம் கோபத்தில் எனக்கு எதிராக தவறான முடிவை எடுத்தார். தவறை உணர்ந்து என்னை பார்க்க வந்தார்.

    பழைய நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமியை டெல்லி இணைத்து வைத்தது தவறான முடிவு. எங்களை தவறானவர்கள் என்று நினைத்து செய்தார்களா அல்லது எடப்பாடி பழனிசாமியை நல்லவர் என்று நினைத்து செய்தார்களா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமருக்கு வரவேற்பு மற்றும் வழி அனுப்பும் நிகழ்ச்சிகளில் ஆதரவாளர்களுடன் இருவரும் பங்கேற்பு.
    • நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை.

    தமிழகம் வந்த பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். அதேபோல் ஓ.பன்னீர் செல்வமும் தமது ஆதரவாளர்களுடன் பிரதமரை வரவேற்றார். அதிமுகவின் இரு தலைவர்களும் ஒன்றாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பட்டமளிப்பு விழா நிறைவுக்கு பின்னர் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியிலும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இருவரும் அருகருகே நின்றபடி பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    பிரதமரை வழி அனுப்பும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, ராஜன் செல்லப்பா, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், மதுரை மேயர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

    பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி சிரித்தப்படி பூங்கொத்துக் கொடுத்து வழி அனுப்புவதும், அருகில் ஓ.பன்னீர் செல்வம் சிரித்தபடி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. பிரதமருக்கான வரவேற்பு நிகழ்ச்சியை போலவே வழி அனுப்பும் நிகழ்ச்சியிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று இரவு சென்னை வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை, ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
    • ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை படித்து பார்த்த பிறகே கருத்துக் சொல்ல முடியும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில்  ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தொண்டர்கள் ஆதரவும், பொதுமக்கள் ஆதரவும் எங்களுக்கு முழுமையாக இருக்கிறது.

    எம்ஜிஆர் மறைந்தபோது அம்மா அணி, ஜானகி அம்மா என இரண்டு பிரிவுகளாக தேர்தலை சந்தித்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் தலைவர்கள் இணைவதற்கு முன்பே தொண்டர்கள் இணைந்தனர். அதேபோல் இன்றைக்கும் அனைவரும் ஒற்றிணைய வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்து வலுவாக உள்ளது.

    தொண்டர்கள் அனைவரும் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கடந்த 11ந் தேதி பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் (எடப்பாடி பழனிசாமி தரப்பினர்) நாடகம் நடத்தினர். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை படித்து பார்த்த பிறகே கருத்துக் சொல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சசிகலா, டிடிவி தினரகரனை சந்தித்து ஆதரவு கேட்பீர்களா? என்று செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் அரசியலில் பயணித்தவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என குறிப்பிட்டார். முன்னதாக உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    • இலங்கை நாட்டிற்கு அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
    • என் குடும்பத்தின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தேன்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது:

    இலங்கை நாடு ஒரு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழக அரசின் சார்பில் இலங்கை நாட்டிற்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபோது, என் குடும்பத்தின் சார்பில் ஐம்பது லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று 29-04-2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.

    இதன் அடிப்படையில், புரட்சித் தலைவி அம்மா நினைவாக, எனது மூத்த மகனும், மக்களவை உறுப்பினருமான ப. ரவீந்திரநாத் வங்கிக் கணக்கிலிருந்து இருபத்தைந்து லட்சத்திற்கான வரைவோலை, எனது இளைய மகன் வி. ப. ஜெயபிரதீப் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் இருபத்தைந்து லட்சத்திற்கான வரைவோலை என மொத்தம் ஐம்பது லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனைப் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புகைச் சீட்டினை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தனியார் பேருந்துகளில் அபரிமிதமாக வசூலிக்கப்படும் பேருந்துக் கட்டணம்.
    • பொதுமக்கள், பேருந்து உரிமையாளர் பாதிக்காத வகையில் நடவடிக்கை வேண்டும்.

    பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகள் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமையை ஒட்டி வந்தால், குடும்பத்தினருடனும், கிராம மக்களுடனும் இணைந்து பண்டிகையை கொண்டாடலாம் என்ற எண்ணத்தில், கூடுதலாக ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து, நகர்ப்புறத்திலிருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்வது என்பது இயல்பான ஒன்று.

    இதுபோன்ற தருணங்களில், அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவது என்பது வாடிக்கை. இருப்பினும், அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காத சூழ்நிலையில் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடுவது என்பது இயற்கையான ஒன்று. ஆனால், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், பேருந்துக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்துகின்றன.

    இந்த வகையில், தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளை அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், பேருந்துகளின் கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தியுள்ளன.

    உதாரணமாக, சென்னையிலிருந்து மதுரைக்கு 3,200 ரூபாயும், சென்னையிலிருந்து திருச்சிக்கு 3,000 ரூபாயும், சென்னையில் இருந்து நாகர்கோயிலுக்கு 3,850 ரூபாயும், சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு 4,000 ரூபாயும், ஓசூரிலிருந்து கோவில்பட்டிக்கு கிட்டத்தட்ட 4,000 ரூபாயும், வசூலிக்கப்படுவதாகவும், இந்தக் கட்டணங்கள் தனியார் பேருந்து நிறுவனங்களின் இணையதளத்தில் வெளிப்படையாகவே இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

    சாதாரணமாக 800 ரூபாய், 900 ரூபாய் என்றிருக்கக்கூடிய பேருந்துக் கட்டணங்கள் எல்லாம், இதுபோன்ற தருணங்களில் 3,000 ரூபாய், 4,000 ரூபாய் என்று விமானக் கட்டணங்களுக்கு இணையாக வசூலிக்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல.

    இவ்வாறு தனியார் பேருந்து நிறுவனங்கள் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு போக்குவரத்து துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், புகார் அளிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும், பெரும்பாலானோர் புகார் அளிக்க முன்வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

    தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் குறித்து அரசாங்கத்தின் சார்பில் கட்டணம் ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துக் கட்டணத்தை வரைமுறை செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

    எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் தனியார் பேருந்துகளில் அபரிமிதமாக வசூலிக்கப்படும் பேருந்துக் கட்டணத்தை தடுத்து நிறுத்தவும், பொதுமக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் நலன்கள் பாதிக்காத வகையில் நியாயமான கட்டணத்தை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×