என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கட்டணம்"

    • வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் மின்கட்டணம்.
    • அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும் என்றனர்.

    கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 4-வது வார்டு தி.மு.க. கிளைச் செயலாளர் சபரி ராஜன். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இருவருக்கும் தனித்தனி மின் இணைப்பு இருந்த நிலையில் அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே மின் இணைப்பாக மின்வாரிய அதிகாரிகள் மாற்றி உள்ளனர். இதனால் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக வந்து உள்ளது. இதனை மாற்ற வலியுறுத்தி சபரி ராஜன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துள்ளார். அதிகாரிகளும் ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இந்த மாதம் வீட்டுக்கு ரூ.8 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் வந்து இருப்பது சபரிராஜனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தனது மகள் வெளியூர் சென்றுள்ளதால், மின்சாரம் பயன்படுத்தாத நிலையிலும் மின் கட்டணம் அதிகரித்து உள்ளதாகவும் , வழக்கம்போல இரு மின் இணைப்பு வழங்க ஆன்லைன் மூலமாக தேவையான ஆவணங்கள் அளித்திருப்பதாகவும், அதன் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக சபரிராஜன் புகார் கூறினார்.

    மேலும், டீக்கடை நடத்தி வரும் தன்னால் ரூ.8 ஆயிரம் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக கூறி சபரிராஜன் இன்று காலை தனது மனைவியுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினர். இதைக்கேட்ட சபரி ராஜன் ஆவேசமடைந்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சபரி ராஜனிடம் இருந்து மண்ணெண்ணை கேனை பறித்ததோடு, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.16% கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருக்கிறது.
    • இழப்புகளை ஈடு செய்வதற்காகவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மகாராஷ்டிரத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே 39.81% அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திராவிட மாடல் அரசு, அடுத்த சில நாள்களில் மேலும் 3.16% மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தப் போகிறது. மக்களை வாழவைக்கப் போவதாக ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டி ஊழல் செய்வது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது.

    தமிழ்நாட்டின் நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக, மகாராஷ்டிரத்தில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை இணைப்புகளுக்குமான மின்கட்டணங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 26% குறைக்கப்படும்; முதல் கட்டமாக நடப்பாண்டில் 10% கட்டணம் குறைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சரும், மின்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் அறிவித்திருக்கிறார். மகாராஷ்டிர அரசின் இம்முடிவுக்கு அம்மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்புதல் அளித்திருக்கிறது. மகாராஷ்டிர அரசின் இந்த முடிவு அம்மாநில மக்களிடம் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதில் வியப்பில்லை.

    ஆனால், தமிழ்நாட்டில்....?

    திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில், அதாவது 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 52 விழுக்காடும், சராசரியாக 32 விழுக்காடும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அந்த நிதியாண்டின் எஞ்சிய 7 மாதங்களில் மட்டும் ரூ.23,863 கோடியும், முழு ஆண்டுக்கும் சேர்த்து ரூ.31,500 கோடியும் மின்வாரியத்திற்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2.18 விழுக்காடும், 2024-ஆம் ஆண்டு ஜூலை முதல் 4.83 விழுக்காடும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 39.81% மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.41,500 கோடியும், கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடிக்கும் கூடுதலாகவும் வாரியத்திற்கு வருவாய் கிடைத்திருக்கக் கூடும்.

    இவை மட்டும் போதாது என்று ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.16% கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகும் என்று அழைக்கப்படுகிறது. அதையும் சேர்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 42.17%, அதாவது ரூ.45,000 கோடி மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. இது உண்மையாகவே தமிழக மக்களுக்கு கிடைத்த பெரும் சாபமாகும்.

    ஒருவேளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்து, இதே அளவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மகாராஷ்டிரத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதாகவும் வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாம் ஆண்டின் முடிவில் தமிழ்நாட்டுக்கும், மகாராஷ்டிரத்திற்கும் இடையிலான மின் கட்டண வேறுபாடு இப்போது இருக்கும் அளவை விட 50% அதிகரித்திருக்கும். தமிழகத்தை ஆளும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களை எவ்வாறு சுரண்டுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு.

    தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கும், மகாராஷ்டிரத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதற்கும் முதன்மைக் காரணம் நிர்வாகத் திறன் தான். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிர்வாகத் திறனை பூதக் கண்ணாடி கொண்டு தான் தேட வேண்டியிருக்கிறது. மகாராஷ்டிர மாநில மின்வாரியம் நிர்வாகத்தில் சிறந்து விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, அடுத்த ஐந்தாண்டுகளில் சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், நீர் மின்சாரம் போன்ற பசுமை மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் ரூ.66,000 கோடியை மகாராஷ்டிர மின்வாரியம் சேமிக்கப் போவதாக அதன் நிர்வாக இயக்குனர் லோகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அவ்வாறு சேமிக்கப்பட்ட தொகை தான் மின்கட்டண குறைப்பாக அம்மாநில மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது.

    ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது. 2022-23ஆம் ஆண்டில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை ரூ.13,179 கோடி கூடுதலாக கொடுத்து தமிழ்நாடு மின்வாரியம் வாங்கியிருக்கிறது. சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்கியது தான் இதற்கு காரணம் ஆகும். அந்த ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.82,400 கோடி மட்டும் தான். ஆனால், அதில் ரூ.51,000 கோடிக்கு, அதாவது கிட்டத்தட்ட 62% வெளியிலிருந்து மின்சாரம் வாங்கினால் மின்வாரியத்தை எவ்வாறு லாபத்தில் இயக்க முடியும்? இந்த இழப்புகளை ஈடு செய்வதற்காகவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது.

    தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டுவதில் தான் முதலிடம் பிடித்துள்ளது. திமுகவின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை பரிசாக அளிப்பார்கள். அடுத்து அமையவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில், மின்கட்டணம் குறைந்தபட்சம் 25% அளவுக்கு குறைக்கப்படும்; நேர்மையான நிர்வாகத்தின் மூலம் இதை பாமக சாதிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
    • தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

    போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

    எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
    • மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது தொடர்பாக அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால், அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத் தான் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு மாயை தான். மின்கட்டணம் உயர்த்தப்படாததால் தான் மின்சார வாரியம் இழப்பை எதிர்கொண்டு வருகிறது என்பதோ, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் மின்வாரியம் லாபத்தில் இயங்கும் என்பதோ உண்மையல்ல. இதை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வரவு செலவு கணக்கு குறித்த புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன.

    2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண உயர்வின் மூலம் அந்த ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆண்டு முழுவதற்கும் கணக்கிட்டால் ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும். அதற்கு முன் மின்வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் ரூ. 10,000 கோடியாக அதிகரித்தது.

    2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023-24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் 4.83% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிலும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவே, ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது.
    • அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்க (சிஸ்வா) ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் சங்க செயலாளர்கள் கோகுல்குமார், ரவிச்சந்திரன், பொருளாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தங்கவேல், சங்க ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது :- தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ள மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது. கொரோனா தொற்று, நூல் விலையேற்றம், உலகப் பொருளாதார மந்தநிலை போன்றவற்றால் ஏற்கனவே,கடும் நஷ்டத்தில் தொழில் புரிந்து வருகிறோம். இந்த நிலையில் மின் கட்டண உயர்வை மாற்றி அமைக்க வேண்டும் என மின்துறை அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    அரசு அறிவித்த உச்சகட்ட மின் கட்டண குறைப்பு அறிவிப்பு, எந்த விதத்திலும் பாதிப்பை ஈடு செய்யாது. சிறு, குறு தொழில்களின் கீழ் உள்ள நாடா இல்லா தறிகளுக்கு தனியாக மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தனி குழு அமைத்து எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். ஜவுளி உற்பத்தி துறை கடந்த ஓராண்டாக வலுவிழந்ததுடன், அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    தொழில் நிறுவனங்கள் 30 சதவீதம் இயங்காத நிலையில், ரிசர்வ் வங்கியின் 2 சதவீத வட்டி உயர்வு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையினர் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை ஓராண்டு தள்ளி வைக்க வேண்டும். சோலார் வாயிலாக மின் உற்பத்தி செய்ய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டத்தை கூட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு ‘ஷாக்’காக இருந்து வந்த நிலையில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சிலர் கூடுதலாக உள்ள இணைப்புகளை சரண்டர் செய்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தி அறிவித்தன.

    500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோர் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

    மின் கட்டண உயர்வால் வாடகை வீடுகளில் குடியிருப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஒவ்வொருவரும் கூடுதலாக ஆயிரத்திற்கும் மேல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. ஏ.சி. பயன்படுத்தும் வீடுகளில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்தது.

    மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு 'ஷாக்'காக இருந்து வந்த நிலையில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதமே வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக பயன்பாடு, கடைகள் போன்றவை பொதுவாக பயன்படுத்தப்பட்ட படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அந்த பாதிப்பு இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

    இதுவரையில் 1-ஏ என்ற அடிப்படையில் முதல் 100 யூனிட்டுகளுக்கு இலவசமாக பொது பயன்பாட்டிற்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1-டி யாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணமான ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரே வீட்டில் 3 சமையல் அறை கொண்ட வீடுகள் இருந்தால் 3 மின் மீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதுபோக 4-வதாக உள்ள ஒரு மீட்டர் பொதுவான மின்விளக்கு, குடிநீருக்கான மோட்டார் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

    அந்த மீட்டருக்கு இதுவரையில் இலவசமாக வழங்கப்பட்ட 100 யூனிட் மின்சாரம் இனி கிடையாது. அவற்றிற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நிலையான கட்டணம் ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

    பொதுவாக பயன்படுத்தக்கூடிய மீட்டரை 100 யூனிட் உபயோகப்படுத்தி இருந்தால் ரூ.800 கட்டணமும் ரூ.200 நிலையான கட்டணமும் சேர்த்து ரூ.1000 வசூலிக்கப்படுகிறது.

    சென்னையில் இதுவரையில் பொதுவான பயன்பாட்டிற்கு பலர் தனி மின் மீட்டரை பயன்படுத்தி வந்தனர். வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் மோட்டார், பொதுவான மின் விளக்கிற்கு தனியாக கட்டணம் வசூலிக்க தனி மீட்டர் பயன்படுத்தி வந்தனர்.

    மேலும் சொந்த குடியிருப்புகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பொதுவான பயன்பாட்டிற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குடியிருப்புகளுக்கு வணிக ரீதியிலான கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. இதனால் சாமான்ய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சிலர் கூடுதலாக உள்ள இணைப்புகளை சரண்டர் செய்து வருகின்றனர். தற்போது மோட்டார், மின்விளக்கு, லிப்ட் ஆகியவற்றிற்கு கட்டணம் உயர்த்தியதால் பொதுவான பயன்பாடு உள்ள மின் இணைப்பை வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மீட்டருடன் இணைத்து வருகின்றனர்.

    இதனால் வரும் நாட்களில் பொது பயன்பாடு மின்மீட்டர் சரண்டர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாத சம்பளத்தில் மின் கட்டணத்திற்கே பெரும் தொகை செலவிட வேண்டிய நிலை உருவாகி உள்ளதால் பொதுமக்கள் ஏ.சி. பயன்படுத்துவதை தவிர்த்தும், தேவையற்ற மின்சாதனங்களை குறைத்தும் வருகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, 'பொதுவான மின் உபயோக பயன்பாட்டிற்குரிய மீட்டர் எந்தெந்த வீடுகளில் உள்ளது என்பதை ஊழியர்கள் ஆய்வின் மூலம் கண்டு பிடித்து மாற்றி வருகின்றனர்.

    அதிகளவு ஓடாமல் இருக்கும் மீட்டர், பொதுவான மோட்டார், படிக்கட்டு மின்விளக்கிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதுபோன்ற இணைப்புகளை அலுவலகத்தில் இருந்தும் கண்டுபிடித்து புதிய டேரிப்பிற்கு மாற்றி வருகிறோம்' என்றனர்.

    • 1,600 மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் மின் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.
    • ஜனவரி மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே மார்ச் மாதத்திற்கும் செலுத்த வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை எஸ்.வி., புரம் மற்றும் கொமரலிங்கம் பெருமாள் புதூர் மின் இணைப்புகளுக்கு நடப்பு மாத மின் கணக்கீடு செய்யாததால் ஜனவரி மாத தொகையை செலுத்துமாறு மின் வாரியம் அறிவித்துள்ளது.

    இது குறித்து உடுமலை கோட்ட செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டம், கிராமம் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, எஸ்.வி., புரம் பகிர்மான மின் இணைப்புகளில் சுமார் 1,600 மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் 2023 மார்ச் மாதத்திற்கான மின் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.ஆகவே எஸ்.வி., புரம் மின் பகிர்மான நுகர்வோர் ஜனவரி மாதம் செலுத்திய தொகையையே, மார்ச் மாதத்திற்கும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கொமரலிங்கம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, பெருமாள் புதூர் பகிர்மான மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால் மார்ச் 2023 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.ஆகவே பெருமாள்புதூர் பகிர்மான மின் நுகர்வோர், கடந்த ஜனவரி மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே மார்ச் மாதத்திற்கும் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.
    • இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

    தாராபுரம் :

    தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மானூர்பாளையம் மின்சார வாரிய பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட காசிலிங்கபாளையம், நிறையூர், பெரியகுமாரபாளையம், மேற்கு சடையம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.

    எனவே மின் நுகர்வோர் கடந்த பிப்ரவரி மாதம் செலுத்திய மின் கட்டணத்தை ஏப்ரல் மாதத்திற்கும் செலுத்தலாம். இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள–ளது.

    • மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • இதை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள 2 கோடியே 37 லட்சம் மின் நுகர்வோர்கள் பாதிக்கப்படக்கூடிய வகையில் தி.மு.க. அரசு கடந்த செப்டம்பரில் மின் கட்டணத்தை உயர்த்தியது.

    தமிழகத்தில் 50 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர். கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தி.மு.க. அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர் போராட்டங்களை நடத்தினார். இந்த நிலையில் தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின்பேரில் அடுத்த மாதம் முதல் மின்கட்ட ணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மின் கட்டணத்தை உயர்த்தி 9 மாதங்களே ஆன நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. எதிர் கட்சியாக இருந்தபோது உயர்த்தாத மின் கட்ட ணத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால் இன்று அவரது ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்துகிறார். இது நியாயமா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது மத்திய அரசு அழுத்தம் கொடுத்தும் நிதிசுமை இருந்த போதும் மின் கட்டணத்தை உயர்த்த வில்லை. அதனால் இந்த மின் கட்டணத்தை உயர்வு என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது இதை உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.
    • வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாய மாக்கப்பட்டது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும்.

    இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக். குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 09.09.2022 அன்று 2022-23 முதல் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.

    இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப் பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீத்திலிருந்து 2.18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த முடிவால்

    அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

    ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

    (இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது-மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்திய பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147 பைசா/யூனிட்)-தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
    • நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    பல்லடம் :

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள்,20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

    இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இந்த நிலையில் விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து 6 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை சங்கோதி பாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறியாளர்கள், விசைத்தறிகளுக்கு கூடுதலாக கணக்கீடு செய்த மின் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும், நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கு அபராத வட்டியை ரத்து செய்யக் கோரியும் காரணம்பேட்டை மின் பகிர்மான உதவி பொறியாளரிடம் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர்.

    • மின்கொள்முதல் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் வினியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.
    • மின்கட்டண உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

    டெல்லியில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்து இருக்கிறது. அந்த வகையில் மின்கொள்முதல் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் வினியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் மின்கட்டண உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.

    ×