search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Powerloom Weavers"

    • ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
    • நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    பல்லடம் :

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள்,20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

    இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இந்த நிலையில் விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து 6 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை சங்கோதி பாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறியாளர்கள், விசைத்தறிகளுக்கு கூடுதலாக கணக்கீடு செய்த மின் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும், நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கு அபராத வட்டியை ரத்து செய்யக் கோரியும் காரணம்பேட்டை மின் பகிர்மான உதவி பொறியாளரிடம் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர்.

    • கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது.
    • முதல் 1000 யூனிட் வரை சலுகை வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஏற்ற, இறக்கத்துடன் கூடிய சந்தை நிலவரம், மூலப்பொருட்களான பஞ்சு, நூல் ரகங்கள் விலையில் தினமும் ஏற்படும் மாற்றங்கள், உரிய ஒப்பந்தக்கூலி கிடைக்காமை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது விசைத்தறி தொழில்.

    கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது. அதிர்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மின் கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டது. முதல் 1000 யூனிட் வரை சலுகையும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசைத்தறியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு விசைத்தறிகளை இயக்கினர்.

    கடந்த 9 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை பில்கள் வந்துள்ளன.அதில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்துடன் அபராதத்தொகை மற்றும் வட்டியும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த தயாராக உள்ளதாகவும், நிலுவைத் தொகையை கட்ட தவணை வேண்டும்.வட்டியை ரத்து செய்ய வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 6 தவணைகளில் நிலுவைத்தொகையை செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    வட்டி குறைப்பு குறித்து முறையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில், குறைக்கப்பட்ட மின் கட்டண அடிப்படையில் நிலுவைத் தொகையை செலுத்த தயாராக உள்ளோம். ஆனால், அதுகுறித்தும் வட்டியை ரத்து செய்வது குறித்தும் எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இதனால் ஒவ்வொரு விசைத்தறியாளர்களுக்கும் மின் கட்டண தொகை சுமையாக மாறியுள்ளது.மின் துறை அமைச்சர், மின் வாரிய சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. என்ன செய்வது என புரியவில்லை என்றனர்.

    • விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.
    • மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இந்தநிலையில், விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி, திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது :- தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று நிலுவையில் உள்ள விசைத்தறி மின் கட்டணத்தை கட்டுவதற்கு 6 தவணைகளாக பிரித்து கட்டணம் செலுத்தவும்,மேலும் மின் கட்டணத்தில் உள்ள அபராத தொகையை கழித்தும் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்த, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி.

    இந்தநிலையில் தமிழ்நாடு மின் வாரியம் விசைத்தறியாளர்களுக்கு கடந்தாண்டு 2022 செப்டம்பர் முதல் ஏப்ரல் 2023 வரை நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்தை அபராதத்துடன் ஆறு மாத தவணையில் செலுத்த வேண்டும் என தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி விசைத்தறியாளர்கள் நிலுவையில் உள்ள மின் பயன்பாட்டு கட்டணத்துடன் அபராததொகையும் சேர்த்துசெலுத்தி வருகின்றனர்.திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்த தயாராக உள்ளோம். அபாரதத் தொகையை தள்ளுபடி செய்யக்கோரி அமைச்சரை சந்திப்பதற்காக நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்.அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.
    • முதல்வர் மு.க. ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் பல்லடம், சோமனூர் பகுதிகளில் அதிகப்படியான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல்லடம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- விசைத்தறி தொழில் மேலும் வளர்ச்சி பெற, பல்லடத்தை மையமாகக் கொண்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கடந்த 2017 முதல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசே நிலம் அளித்து, அதில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இன்று வரை திட்டம் கிடப்பில் உள்ளது.

    சமீபத்தில் கோவை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். எங்களது பல நாள் கோரிக்கையின்படி பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைத்து தர வேண்டும். இதனால் நெசவாளர்கள் சொந்த விசைத்தறியாளர்களாக மாற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண த்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது
    • முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது.

    மங்கலம்  :

    தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அனுமதி வழங்க கோரி அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசைத்தறி யாளர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

    விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண த்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது. முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது. இந்நிலையில் நிலுவை யில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை கேட்டும், மின் கட்டணத்துக்கான அபராத தொகையை ரத்து செய்ய கோரியும், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு ள்ளனர்.அங்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, மின்வா ரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகி யோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.கூட்டமை ப்பு நிர்வாகிகள் கூறுகையில், ஒவ்வொரு விசைத்தறி குடோன்களுக்கும் 3 முதல்4 மின் கட்டண பில்கள் வந்து ள்ளன. அவற்றை தவணை முறையில் கட்ட அனுமதி கேட்டும், அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் அமைச்சரை சந்தித்து மனு அளித்து ள்ளோம் என்றனர்.

    • மின்கட்டண சலுகை வழங்கிய முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
    • பாராட்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர்.

    மங்கலம் :

    தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் நாளை கோவை மாவட்டம்,கருமத்தம்பட்டி பகுதியில் விசைத்தறி மற்றும் கைத்தறிகளுக்கு மின்கட்டண சலுகை வழங்கிய தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெறவுள்ள பாராட்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர்.இதில் தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பு செயலாளர் இரா.வேலுச்சாமி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளர் சித்தோடு கே.சுப்பிரமணியன், மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் மங்கலம் சங்க நிர்வாகி.சுல்தான்பேட்டை ஆர்.கோபால், தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் ஈரோடு.கந்தவேல் ,தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன், கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க தலைவர் செல்வகுமார், பல்லடம் விசைத்தறி சங்க துணைத்தலைவர் பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • ஜவுளித்தொழிலில் நெருக்கடி குறைந்து விரைவில் நல்ல நிலைக்கு வரும் .

    மங்கலம் :

    விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 750 யூனிட்டாக இருந்த நிலையில் 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

    இந்த அறிவிப்பு குறித்து மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் -கூறுகையில்

    தமிழகத்தில் மார்ச்1-ந்தேதி முதல் விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அந்த வகையில் விசைத்தறிக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட 3 நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றப்பட்டு ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்/ மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டாக இருந்த நிலையில் 1000 யூனிட்டாக உயர்த்தியும் ,கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பதை 300 ஆக உயர்த்தியும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் ஜவுளித்தொழிலில் நெருக்கடி குறைந்து விரைவில் நல்ல நிலைக்கு வரும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் குறைப்பு மற்றும் விசைத்தறிக்கான 1000 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி , செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும்திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் மா.சிவசாமி கூறுகையில்,இதன் மூலம் விசைத்தறித் தொழில் நல்ல நிலையில் சீரடைந்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

    • மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது.
    • அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்க (சிஸ்வா) ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் சங்க செயலாளர்கள் கோகுல்குமார், ரவிச்சந்திரன், பொருளாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தங்கவேல், சங்க ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது :- தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ள மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது. கொரோனா தொற்று, நூல் விலையேற்றம், உலகப் பொருளாதார மந்தநிலை போன்றவற்றால் ஏற்கனவே,கடும் நஷ்டத்தில் தொழில் புரிந்து வருகிறோம். இந்த நிலையில் மின் கட்டண உயர்வை மாற்றி அமைக்க வேண்டும் என மின்துறை அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    அரசு அறிவித்த உச்சகட்ட மின் கட்டண குறைப்பு அறிவிப்பு, எந்த விதத்திலும் பாதிப்பை ஈடு செய்யாது. சிறு, குறு தொழில்களின் கீழ் உள்ள நாடா இல்லா தறிகளுக்கு தனியாக மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தனி குழு அமைத்து எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். ஜவுளி உற்பத்தி துறை கடந்த ஓராண்டாக வலுவிழந்ததுடன், அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    தொழில் நிறுவனங்கள் 30 சதவீதம் இயங்காத நிலையில், ரிசர்வ் வங்கியின் 2 சதவீத வட்டி உயர்வு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையினர் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை ஓராண்டு தள்ளி வைக்க வேண்டும். சோலார் வாயிலாக மின் உற்பத்தி செய்ய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டத்தை கூட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு சமூக பேச்சுவார்த்தை மூலம் போனஸ் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்
    • இல்லை எனில் வருகிற 20 ம் தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தீபாவளி போனஸ், கூலி உயர்வு ஒப்பந்தம் சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும், அனைத்து கட்சி தொழில் சங்க கூட்டு குழுவிற்கும் போனஸ் ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படும்.

    கடந்த 2019 ம் வருடம் நடந்த மூன்றாண்டு ஒப்பந்த உடன்படிக்கை காலாவதியாகி விட்டதால் இந்த வருடம் புதிய ஒப்பந்தம் போட வேண்டும்.

    இது குறித்து தி.மு.க., தொழிற்சங்கமான எல்.பி.எப்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழில் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., ஆகிய தொழில் சங்கங்கள் மட்டும் போனஸ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளிக்கு 10 நாட்கள் தான் உள்ள நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்க வில்லை. மேலும் அனைத்து தொழில் சங்கமும் இணைந்து கூட்டு குழு ஏற்படுத்தி நோட்டீஸ் வழங்க வேண்டும் என முதலாளிகள் சங்கம் கூறி வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் ஏ.ஐ.டி.யு.சி., தொழில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக நேற்று வருகிற 19 ம் தேதிக்குள் சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு சமூக பேச்சுவார்த்தை மூலம் போனஸ் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் இல்லை எனில் வருகிற 20 ம் தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

    • வேலைநிறுத்தம் செய்வது குறித்தும், உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
    • 800 ரூபாயாக குறைத்ததற்கு,தமிழக அரசுக்கு நன்றிகூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் பொது உறுப்பினர் கூட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் சின்னம்மன் சேவா சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.சங்க தலைவர் இரா.வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

    இதில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்துவது குறித்தும், வேலைநிறுத்தம் செய்வது குறித்தும், உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விசைத்தறிகளுக்கு ,உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளதால் வருகிற அக்டோபர் மாதம் 1 ந்தேதி முதல் மின்கட்டணம் செலுத்துவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் விசைத்தறி மின் இணைப்புகளுக்கு நிலைக்கட்டணம் 560 ல் இருந்து 1600 ஆக உயர்த்தியதை 800 ரூபாயாக குறைத்ததற்கு,தமிழக அரசுக்கு நன்றிகூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதேபோல் மின் கட்டணத்தையும் குறைத்து பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமெனக்கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை ஆகியோரைச் சந்தித்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம்.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சோமனூர் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது :-

    8 ஆண்டுகளாக ஒப்பந்த படி, கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறிகளை இயக்கி வருகிறோம்.நூல் விலை உயர்வால் தொழில் முடங்கியுள்ளது.இந்நிலையில், விசைத்தறிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம். இதை நம்பி பல்லாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.மின் கட்டணத்தை உயர்த்தினால் விசைத்தறி மற்றும் சார்பு தொழில்கள் முடங்கி விடும். மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.
    • தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

    பல்லடம் :

    திருப்பூர் வந்த மத்திய இணை அமைச்சர் முருகனிடம் விசைத்தறிதொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி தொழிலை நம்பி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். தற்போது அதிநவீன ஏர்ஜெட்,சூல்ஜர்,போன்ற தானியங்கி விசைத்தறிகள் அதிகரிப்பால் விசைத்தறி தொழிலில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

    எனவே விசைத்தறி தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற, கைத்தறி தொழிலுக்கு ரகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை போல் விசைத்தறிக்கு என்று தனி ரகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான சட்டம் இயற்றி விசைத்தறி தொழிலையும், விசைத்தறியாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்த மத்திய அரசு முழு மானியம் வழங்க வேண்டும். அதேபோல பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரவுள்ள பருத்தி சாகுபடி சீசனில் பருத்தியை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வருடம் முழுவதும் ஒரே சீரான விலையில் நூல் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி விசைத்தறி தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×