மின்கட்டண அபராத தொகையை ரத்து செய்ய விசைத்தறியாளர்கள் கோரிக்கை

ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
 அபராத கட்டணத்தை ரத்து செய்யக்கோரி விசைத்தறியாளர்கள் மனு அளித்த போது எடுத்த படம்.
 அபராத கட்டணத்தை ரத்து செய்யக்கோரி விசைத்தறியாளர்கள் மனு அளித்த போது எடுத்த படம்.
Published on

பல்லடம் :

திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள்,20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதனை ஏற்று விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விசைத்தறியாளர்கள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இந்த நிலையில் விசைத்தறியாளர்களுக்கு நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை அபராத தொகையுடன் சேர்த்து 6 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை சங்கோதி பாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறியாளர்கள், விசைத்தறிகளுக்கு கூடுதலாக கணக்கீடு செய்த மின் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும், நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கு அபராத வட்டியை ரத்து செய்யக் கோரியும் காரணம்பேட்டை மின் பகிர்மான உதவி பொறியாளரிடம் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com