

ஈரோடு:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் பிச்சாண்டம்பாளையத்தில் உள்ள விசைத்தறி கூட்டங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் நெசவாளர்களின் தேவை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட் வரை உயர்த்தி இருப்பது பயனுள்ளதாக இருக்கிறதா? என அங்குள்ள நெசவாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.
அதற்கு நெசவாளர்கள் தொழில் மேன்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றனர். மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்தினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் நெசவாளர்களின் குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
குழந்தைகளிடம் என்ன படிக்கிறீர்கள். நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதனை அடுத்து முதலமைச்சருடன் நெசவாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.