செய்திகள்

ஆதாரங்கள் இருந்தாலும் நிரூபிக்க முடியாத வழக்காகிவிட்டது: வானதி கருத்து

Published On 2017-12-21 09:29 GMT   |   Update On 2017-12-21 11:58 GMT
சுப்ரீம் கோர்ட்டு முகாந்திரம் இருப்பதாக கூறியும் ஆதாரங்கள் இருந்தாலும் நிரூபிக்க முடியாத வழக்காகிவிட்டது என பாரதிய ஜனதா வக்கீல் வானதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ஜனதா பொதுச்செயலாளர் வக்கீல் வானதி சீனிவாசன் 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து கூறியதாவது:-

2ஜி வழக்கை பொறுத்த வரை ஆரம்பத்தில் அரசு அமைப்புதான் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டது. அதன் தொடர்ச்சியாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் கனிமொழி அ.ராசா மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தவறுக்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கருதி சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டுதான் உத்தரவிட்டது.

சி.பி.ஐ. விசாரணை, புலனாய்வு குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் செய்து முடிக்கப்பட்டன.

கிரிமினல் வழக்குகளில் தண்டனை என்பது நூறு சதவீதம் ஆதாரத்துடன் குற்றங்களை நிரூபித்தால் தான் வழங்க முடியும். இப்போது தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் முறைகேடுகளை சி.பி.ஐ நிரூபிக்க தவறி விட்டதாக குறிப்பிட்டுள்ளது.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கூடுதல் ஆவணங்களை சேர்ப்பதோ, விசாரணை நடத்துவதோ முடியாது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள், குற்றப்பத்திரிகை அடிப்படையில் தான் வழக்கை நடத்த முடியும். அந்த நடைமுறைப்படிதான் வழக்கு நடத்தப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்கள் ஆவணங்கள் வாயிலாக நிரூபிக்கப்படவில்லை என்பதன் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை நிரூபிக்கப்படாத வழக்காகத்தான் பார்க்க முடியும்.

ஏற்கனவே வழக்குக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு டெலிகாம் லைசென்சுகளை கூட ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. ஆக ஆதாரங்கள் இருந்தாலும் நிரூபிக்க முடியாத வழக்காகத்தான் முடிந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News