செய்திகள்

விபத்தில் மாணவி பலி: முசிறி வேன் உரிமையாளர் கைது

Published On 2017-12-18 10:38 GMT   |   Update On 2017-12-18 10:38 GMT
வேன் கவிழ்ந்த விபத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

முசிறி:

நெய்வேலி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிராமங்களிலிருந்து பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வேன் நேற்று முன்தினம் வேளகாநத்தம் அருகே கவிழ்ந்ததில் தேஜாஸ்ரீ(6) என்பவர் பலத்த காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் விபத்தில் காயமடைந்த மூன்று மாணவிகள் முசிறி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். காயமடைந்த வேன் டிரைவர் சிவக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து பற்றி தேஜாஸ்ரீயின் தாயார் கனகா முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வேன் டிரைவர் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வேனில் அளவுக்கு அதிகமாக மாணவிகளை ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

போலீஸ் விசாரணையில் விபத்துக்கு காரணமான வேன் முறையாகவும், சரியான முறையிலும் பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது காரணமாக வேனின் உரிமையாளர் முசிறி ஒன்றியம் நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார்(46) என்பவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

பள்ளிக்குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும் ஆட்டோ மற்றும் வேன்கள் உட்பட பல்வேறு வாகனங்களையும் வட்டார போக்குவரத்து அலுவலர், சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் ஆகியோர் ஆய்வு செய்து, சோதனை நடத்தி முறைப்படுத்த வேண்டும் என்பதே பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News