செய்திகள்

திருவையாறு அருகே தூக்குபோட்டு 2 பெண்கள் தற்கொலை

Published On 2017-12-16 11:19 GMT   |   Update On 2017-12-16 11:19 GMT
திருவையாறு அருகே தூக்குபோட்டு 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறை அடுத்த மணக்கரம்பை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ஜெர்த்துரோஸ் (வய35) இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 7 மாதத்தில் குழந்தை உள்ளது. ஜெர்த்து ரோஸ் அரசுபள்ளி ஆசிரியை. இவர் கடந்த சிலமாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு கொண்டார். உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.

அவரது தாயார் அன்பரசி கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

திருவையாறு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் செந்தில். இவர் மனைவி ராதா(35). இவருக்கு திருமணமாகி 10 வயதில் சண்முகநாதன் என்ற மகன் உள்ளான். இவர் கடந்த சிலநாட்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாராம். நேற்று வீட்டில் தூக்குபோட்டு கொண்டார். அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவந்தனர். பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக கூறினார். அவருடைய தந்தை சுபாஷ்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

Tags:    

Similar News