துடியலூரில் அண்ணன் ஓட்டிய லாரியில் சிக்கி தம்பி பலி
கவுண்டம்பாளையம்:
கோவை சேரன்நகர் ரெயில்வே மென்சன் காலனியில் உரக்கிடங்கு உள்ளது. இங்கு உர லோடு ஏற்றுவதற்காக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பவுன்ராஜன் என்பவரின் மகன்கள் கோபிராஜன் (வயது 31). ஆனந்தன் (28) ஆகியோர் வந்தனர். இங்கு உர லோடு ஏற்றிக்கொண்டு கோபிராஜன் லாரியை பின்னால் எடுக்க முயன்றார். கிளீனராக இருந்த தம்பி ஆனந்தன் பின்னால் வரும்படி லாரிக்கு பின்னால் சென்று சைகை காட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின் சக்கரம் ஆனந்தன் தலை மீது ஏறி இறங்கியது.
தம்பியின் குரலை கேட்காத அண்ணன் லாரியை நிறுத்தி விட்டு இறங்கி பார்த்தபோது தம்பி தலைநசுங்கி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த அண்ணன் அலறி சத்தம்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.
இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பலியான ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான ஆனந்தனுக்கு 1 மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது என்பது தெரியவந்தது. தம்பியின் சாவுக்கு நானே காரணமாகி விட்டேனே என்று அண்ணன் கோபிராஜன் கதறி அழுதார்.