ராஜஸ்தான் கொள்ளையர்கள் பற்றிய சினிமா படத்தை பார்த்தாவது போலீஸ் விழித்துக் கொள்ளட்டும்: நண்பர் வேதனை
சென்னை:
கொள்ளையர்களால் சுடப்பட்டு இறந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உறவினர் ராஜ்குமார் கூறியதாவது:-
இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி எனக்கு அண்ணன் முறை வேண்டும். உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர். யார் எப்போது போனில் கூப்பிட்டு உதவி கேட்டாலும் செய்து கொடுப்பார். துணிச்சல் மிக்கவர்.
ராஜஸ்தானுக்கு சென்றபோது கூட உள்ளூர் போலீசார் அவரை இரவு நேரத்தில் கொள்ளையர்கள் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறார்கள். ஆனால் துணிச்சலுடன் சென்றார். அவருடன் 6 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அது போதாது. கூடுதல் போலீசாரை அனுப்பி இருக்க வேண்டும்.
ராஜஸ்தான் கொள்ளையர்கள் பற்றி சமீபத்தில் சினிமா படம் வெளியானது. அதில் கொள்ளையர்களின் அட்டூழியத்தையும் போலீஸ் படும் கஷ்டத்தையும் தத்ரூபமாக சொல்லி இருந்தனர்.
அது போன்ற பயங்கர கொள்ளையர்களை பிடிக்க செல்லும் போது 6 பேர் மட்டுமே சென்றது தவறு. கூடுதல் போலீசார் சென்று இருக்க வேண்டும். சினிமா படங்களை பார்த்தாவது போலீஸ் விழித்துக் கொள்ளட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.