செய்திகள்
புழல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி மேலாளர் பலி
புழல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி மேலாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
புழல், அம்பத்தூர் சாலையில் வசித்து வந்தவர் மகேஷ் (வயது 41). அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றினார். சட்ட ஆலோசகராவும் இருந்து வந்தார்.
நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் அம்பத்தூரில் இருந்து புழல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கதிர்வேடு மேம்பாலம் சர்வீஸ் சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. தலையில் பலத்த காயம் அடைந்த மகேசை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக இறந்தார்.
பலியான மகேசுக்கு, சுப்ரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.