செய்திகள்

மின்னல் தாக்கி-மரம் முறிந்து பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் உதவி: முதலமைச்சர் உத்தரவு

Published On 2017-12-01 06:59 GMT   |   Update On 2017-12-01 09:44 GMT
அரியலூர், கன்னியாகுமரியில் மின்னல் தாக்கி- மரம் முறிந்து பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி மதுரா சேனாபதி கிராமத்தில் வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த மேலக்கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மனைவி உண்ணாமலை, செல்வராசு மனைவி செந்தமிழ்செல்வி, அண்ணா துரை மனைவி அஞ்சலை மற்றும் அரியலூர் வட்டம், கோவில் எசனை மேற்கு கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் கண்ணுசாமி ஆகிய நான்கு பேர் இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 29.11.2017 மற்றும் 30.11.2017 ஆகிய தேதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக ராஜாக்க மங்கலம், கார்த்திகை வடலியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் ராஜேந்திரன், கீழ பால்கிணற்றான் விளை, சிவசெல்வபுரம் பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகன் குமரேசன், மலையடி, வன்னியூரைச் சேர்ந்த ஜான் ரோஸ் என்பவரின் மகன் அலெக்சாண்டர், மண்டைக் காடு மணலிவிளையைச் சேர்ந்த சரஸ்வதி மற்றும் பறளியார் எஸ்டேட்டைச் சேர்ந்த விமல்சிங் ஆகிய ஐந்து நபர்கள் பலத்த காற்றின் காரணமாக மரம் முறிந்து விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Tags:    

Similar News