செய்திகள்

ஆர்.கே நகர் வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு: அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு

Published On 2017-11-30 06:21 GMT   |   Update On 2017-11-30 06:21 GMT
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் அ.தி.மு.க.வின் வேட்பாளரை தேர்வு செய்வதில் அக்கட்சியில் குழப்பமான நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேட்சையாக டி.டி.வி தினகரன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வேட்பாளரை முடிவு செய்ய அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு இன்று கூடியது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் மேலும், அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, செல்லூர் ராஜூ, வேலுமணி மற்றும் மதுசூதனன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சில மணி நேரங்கள் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் அவைத்தலைவராக உள்ள மதுசூதனன் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த மதுசூதனன், எம்.ஜி.ஆர் காலம் தொட்டே கட்சியில் இருந்து வருகிறார்.

அ.தி.மு.க இரு அணிகளாக இருந்த போது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக மதுசூதனன் இருந்தார். மேலும், ரத்து செய்யப்பட்ட ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்தில் அவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மருதுகணேஷ், டி.டி.வி தினரன் மற்றும் மதுசூதனன் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News