செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு - திருமாவளவன் அறிவிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவு அளித்துள்ளார்.
சென்னை:
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பினை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், “ஜனநாயக முறைப்படி இந்த இடைத் தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும். பிற கட்சிகளிடமும் ஆதரவு கேட்கப்படும்” என்றார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ஆதரவை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; இடதுசாரி கட்சிகள் தி.மு.க.வுக்கு
ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 6 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.