செய்திகள்

குடும்ப பிரச்சினையில் மருமகளை அரிவாளால் வெட்டிய மாமியார் கைது

Published On 2017-11-23 09:49 GMT   |   Update On 2017-11-23 09:50 GMT
கோவை அருகே குடும்ப பிரச்சினையில் மருமகளை அரிவாளால் வெட்டிய மாமியாரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
சூலூர்:

கோவை மாவட்டம் கருமத்தம் பட்டி அருகே உள்ள ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். நூல் வியாபாரி. இவரது மனைவி மோனிஷா (28). இவர்களுக்கு கடந்த 4 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் உள்ளார். மோனிஷாவின் வீட்டில் அவரது மாமியார் வள்ளியம்மாள், (65) மாமனார் பச்சியப்ப கவுண்டர் ஆகியோரும் வசித்து வந்தனர். மேலும் மோனிஷாவின் தாய் வீடும் அருகில் தான் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மோனிஷாவுக்கும், அவரது மாமியார் வள்ளியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வள்ளியம்மாளின் தங்கை மகள் திருமணம் நடைபெற்றது. இதற்கு செல்ல மோனிஷா திட்டமிட்டார், இதனை அவரது மாமியார் வள்ளியம்மாள் விரும்பவில்லை. மருமகளை திருமணத்திற்கு செல்லக் கூடாது என தடுத்தார்.

அதனையும் மீறி மோனிஷா சென்று வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வள்ளியம்மாள் அரிவாளால் தனது மருமகளின் தலையின் பின் பகுதி மற்றும் கையில் வெட்டினார். இதில் மோனிஷா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கருமத்தம் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மருமகளை வெட்டிய மாமியார் வள்ளியம்மாளை கைது செய்தனர்.

Tags:    

Similar News