செய்திகள்
உசிலம்பட்டியில் பஸ் மோதி விவசாயி பலி: கிராம மக்கள் சாலை மறியல்
உசிலம்பட்டியில் பஸ் மோதி விவசாயி பலியானார். இதையடுத்து கிராமமக்கள் சாலை மறியல் செய்தனர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மாதரை கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 65). விவசாயியான இவர் இன்று காலை 9:30 மணியளவில் மாதரையில் உள்ள மதுரை- தேனி மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது மதுரையில் இருந்து தேனி சென்ற பஸ் எதிர்பாராத விதமாக ராசு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் அறிந்த மாதரை கிராம மக்கள் மெயின் ரோட்டிற்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். பஸ் டிரைவரை கைது செய்ய வேண்டும். இந்த பகுதியில் விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.