செய்திகள்

கொடைக்கானலில் ஒரே நாளில் 15 கடைகளை உடைத்து கொள்ளை

Published On 2017-11-10 11:11 GMT   |   Update On 2017-11-10 11:11 GMT
கொடைக்கானலில் ஒரே நாளில் 15 கடைகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளைடியத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு தரப்பினரும் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களாகவே மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடு மற்றும் கடைகளை உடைத்து கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர் பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வந்தது. இது குறித்து தனிப்படை அமைத்த போலீசார் கொள்ளையர்களை பிடித்து மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

அதன்பின்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதால் கொள்ளை சம்பவங்கள் குறைந்தன.

ஆனால் தற்போது மீண்டும் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்ய தொடங்கி உள்ளனர். கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமான பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் உரிமையாளர்கள் கடையை பூட்டி சென்றனர். நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் தொடர்ந்து 15 கடைகளில் பூட்டை உடைத்து பேன்சி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

மறுநாள் காலை கடை திறக்க வந்தவர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பெருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் 15 கடைகளை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News