செய்திகள்

ஆறுமுகநேரி அருகே நள்ளிரவில் பெண்களிடம் ரூ.2 லட்சம் நகைகள் பறிப்பு

Published On 2017-11-05 11:28 GMT   |   Update On 2017-11-05 11:28 GMT
ஆறுமுகநேரி அருகே நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியை அடுத்த மூலக்கரை மேலத்தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி செல்வமணி (வயது 40). அமல்ராஜ் சென்னையில் கார் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு செல்வமணி வீட்டின் கதவை பூட்டிவிட்டு தனது 3 வயது மகனுடன் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் மர்ம நபர் நைசாக வீட்டிற்குள் புகுந்து செல்வமணியின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினான். இதனால் திடுக்கிட்டு விழித்த செல்வமணி திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அந்த நபர் இருட்டான பகுதிக்கு தப்பி ஓடி விட்டான்.முன்னதாக கொள்ளையனுடன் போராடியதில் செல்வமணியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அருகில் உள்ள கந்தன்குடியிருப்பு கிராமத்திலும் இதே போல் மற்றொரு நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. கந்தன்குடியிருப்பு வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (50). இவர் ஆறுமுகநேரியில் உள்ள டீ கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஜெய கிருஷ்ணனின் தாயார் பூவம்மாள் (80) கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பினார். அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்களில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

இந்த 2 நகை பறிப்பு சம்பவங்கள் குறித்தும் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News