லாஸ்பேட்டையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் கென்னடி நகர் தர்மன் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். (வயது 54). முடி திருத்தும் தொழிலாளி. இவருடைய மனைவி மலர்விழி (45). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வேலாயுதத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். சாப்பிட்டு விட்டு மொட்டை மாடியில் தூங்க சென்றார். மாடியில் தடுப்பு சுவர் எதுவும் இல்லாததால் தூக்கத்தில் உருண்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மனைவி காலையில் கணவரை தேடினார். ஆனால், எங்கும் காணவில்லை. மாடியில் சென்று பார்த்த போது கீழே வீட்டு சுவரின் ஓரம் அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.