செய்திகள்

லாஸ்பேட்டையில் மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2017-10-16 11:01 GMT   |   Update On 2017-10-16 11:01 GMT
லாஸ்பேட்டையில் மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை லெனின் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). டெய்லர். இவருக்கு கோகிலா (34) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

சுப்பிரமணியன் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்றும் சுப்பிரமணியன் குடித்துவிட்டு வந்துள்ளார்.

இதனை மனைவி கோகிலா தினமும் குடித்துவிட்டு வருகிறீர்களே. தீபாவளி வருகிறது, மகள்களுக்கு துணிகள் எடுக்க வேண்டுமே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் கோகிலாவையும், மகள்களையும் திட்டியுள்ளார்.

பின்னர் மாலை கோகிலா மகள்களை அழைத்துக் கொண்டு துணி எடுக்க கடைக்கு சென்றார். சுப்பிரமணியன் வீட்டில் இருந்தார். பின்னர் ஜவுளி எடுத்துக்கொண்டு மகள்களுடன் கோகிலா வீடு திரும்பினார்.

ஆனால் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது சுப்பிரமணியன் தூக்கில் தொங்குவதை கண்டு கோகிலா அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சுப்பிரமணியத்தை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News