விருதுநகரில் ரவுடி கொலை: பெண்கள் உள்பட4 பேர் கைது
விருதுநகர்:
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள மல்லி கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 28). இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 21 வழக்குகள் உள்ளன.
ஜாமீனில் வெளியே வந்திருந்த பாண்டி நேற்று பேராலி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாண்டியின் தாய் முனியம்மாள் விருதுநகர் கிழக்குபோலீசில் புகார் செய்தார்.
அதில் பாண்டியன் நகரை சேர்ந்த குற்றவாளி மணிகண்டன் குறித்து போலீசாருக்கு எனது மகன் தகவல் தெரிவித்ததாக நினைத்து மணிகண்டனின் மனைவி ராமலட்சுமி தூண்டுதலின்பேரில் அசோக், கார்த்திகை செல்வம், செல்வி, கிருஷ்ணன், தாதா அருள்ராஜ் ஆகியோர் கொலை செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராமலட்சுமி, அசோக், கார்த்திகை செல்வம், செல்வி ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.. கிருஷ்ணன், அருள்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.