செய்திகள்

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட தடை: உயர் நீதிமன்றம் அதிரடி

Published On 2017-10-13 09:54 GMT   |   Update On 2017-10-13 09:54 GMT
தீபாவளி போனஸ் கோரி 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நடத்தவிருந்த வேலைநிறுத்தத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை:

பொதுமக்களின் நலன் மற்றும் விபத்துக்கு உள்ளானவர்களை காப்பாற்றும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமீபத்தில் போனஸ் அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கிடையே, தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தங்களுக்கும் தீபாவளி போனஸ் தரவேண்டும் எனக்கோரி தீபாவளி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அக்டோபர் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடைவிதிக்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் தமிழக அரசு சார்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசு ஊழியரகள் கிடையாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், அத்தியாவசிய தேவைகளின் கீழ் ஆம்புலன்ஸ் வண்டிகள் வருவதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது. எனவே ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News