செய்திகள்
ஆர்.கே.நகருக்கு எந்த நேரத்தில் தேர்தல் வைத்தாலும் தி.மு.க. சந்திக்க தயார்: மு.க.ஸ்டாலின் பேட்டி
ஆர்.கே.நகர் தேர்தல் நாளைக்கே நடந்தாலும் தி.மு.க. அதை எதிர்கொள்ளும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வருகை தந்துள்ளனர். அவர்கள் தமிழகத்தில் நிலவும் உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது வந்த எய்ம்ஸ் மருத்துவ குழு இதுவரை எதுவும் கூறவில்லை.
ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க. அதை எதிர்கொள்ளும். நாளைக்கே தேர்தல் நடந்தாலும் தி.மு.க. அங்கு போட்டியிடும்.
ஆனால், என்ன காரணங்களுக்காக ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டதோ அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.