search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய குழு ஆய்வு"

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், கொக்கிர குளத்தில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தையும் பார்வையிட்டனர்.
    • அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையான பாதிப்படைந்துள்ளது.

    இதனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்கீடு செய்வதற்காக மத்திய குழு நேற்று தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தது. இந்நிலையில் அந்த குழுவினர் இன்று காலை கோவில்பட்டியில் இருந்து நெல்லை வந்தடைந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயனுடன் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்ய தொடங்கியது. அப்போது சேதங்களையும், அதன் மதிப்பீடையும் கணக்கீடு செய்தனர்.

    இந்த குழுவில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், ஜல்சக்தி அமைச்சகம் தங்கமணி, நிதித்துறை துணை இயக்குனர் ரெங்கநாத் ஆடம், ஐதரபாத்தில் உள்ள மத்திய வேளாண் இயக்குனர் முனைவர் பொன்னுசாமி, மின்சாரத்துறை துணை இயக்குனர் ராஜேஸ் திவாரி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், கொக்கிர குளத்தில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தையும் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தால் சேதம் அடைந்திருப்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து சந்திப்பு மற்றும் டவுன் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அங்கிருந்து அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர். அங்கு ஊர்க்காடு, சாட்டுபத்து, கோடாரன்குளம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன் பின்னர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் ராஜபதி, பாலாமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர். இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதில் ஒரு குழு களக்காட்டில் வாழைகள் சேதம் அடைந்துள்ளதை பார்வையிட்ட பின்னர் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று ஆய்வு செய்கிறது.

    • புழல், சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதம், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.
    • ஆய்வு செய்தபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பொன்னேரி:

    மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ள சேதம் ஏற்பட்டது. வெள்ளம்பாதித்த பகுதிகளை மத்தியகுழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பொன்னேரி வட்டத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவின் அதிகாரிகள் ஏ.கே. சிவ்ஹரே, விஜயகுமார், பவ்யா பாண்டே உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உடன் இருந்தார். புழல், சோழவரம் ஏரிக்கரையில் ஏற்பட்ட சேதம், அதன் சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 9 மணிவரை பழவேற்காடு பகுதியில் மத்திய குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தனர். தத்தைமஞ்சி கிராமத்தில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டபோது விவசாயிகள் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகியது குறித்து பயிர்களை பிடுங்கி காண்பித்தனர். தொடர்ந்து தத்தைமஞ்சி பகுதியில் ஆரணியாற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பு குறித்தும் ஆய்வு செய்தனர். பழவேற்காடு பகுதியில் ஆய்வு செய்தபோது இரவு நேரம் ஆகிவிட்டதால் ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் மதிவாணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பாலசந்தர், பொதுப்பணித்துறை அதிகாரி வெற்றி வேலன் உடன் இருந்தனர்.

    • நிபா வைரஸ் தொற்றுக்கு முதலில் பலியான நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    • நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதன்முதலாக நிபா வைரஸ் பரவியது. அப்போது நிபா ரைவஸ் தொற்று பாதித்து 17 பேர் பலியாகினர். அதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து இறந்தனர்.

    மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபர் கடந்த மாதம் 30-ந்தேதியும், அயன்சேரி பகுதியை சேர்ந்த நபர் கடந்த 13-ந்தேதியும் பலியாகினர். அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் அந்த நபர்களின் குடும்பத்தினரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

    அதில் நிபா வைரஸ் தொற்றுக்கு முதலில் பலியான நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறையினர் உஷார் அடைந்தனர். நிபா வைரஸ் பாதித்து இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயாரித்தனர்.

    அதில் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சை அளித்தவர்கள் என 168 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அதன்படி கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அயன்சேரி, மருதோன்கரை, திருவள்ளூர், குட்டியாடி, காயக்குடி, வில்லியம்பள்ளி, கவிழும்பாறை ஆகிய 7 ஊராட்சிகளில் 47 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

    கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்லவும், அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தொற்று பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

    நிபா தொற்று பாதித்து இறந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களாக பட்டியலிடப்பட்டவர்களில் சிலரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர் ஒருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள முதலில் பலியான நபரின் 9 வயது மகன், மைத்துனர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள தாலுகா மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்துவம் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    அதனை நாளை வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் டியூசன் மையங்களும் மூடப்பட்டன. அனைத்து பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த வருகிற 24-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் கேரளா வந்தனர். மத்திய சுகாதாரக்குழுவின் மூத்த ஆலோசகரும், நுண்ணுயிரியல் நிபுணருமான மால சாப்ரா தலைமையிலான 6 பேர் குழு சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கோழிக்கோடு மாலட்ட கலெக்டர் கீதா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    அவர்களிடம் கோழிக்கோடு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினர், தொற்று பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். தொற்று பாதிப்புக்கு உள்ளான மருதோன்கரை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நிபா வைரஸ் தொற்று கண்டறிவதை தீவிரப்படுத்தும் விதமாக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் இருந்து 2 நடமாடும் ஆய்வக வாகனங்கள் கோழிக்கோட்டுக்கு வந்துள்ளன. அதில் நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு நிபா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கேரளாவின் வடக்கு மாவட்டங்களான மலப்புரம், வயநாடு, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    அந்த மாவட்டங்களில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் பார்வையாளர்களை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    மேலும் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறையினருக்கு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    • ஈரப்பதம் குறித்து அறிந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
    • இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், உடன் சென்று இது தொடர்பான விவரங்களை மத்திய குழுவினரிடம் விவரமாக எடுத்துரைத்தார்

    திருச்சி:

    தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஜெங்கமராஜபுரம், ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தின் தற்போதைய நிலையை உயர்த்தி கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய குழு கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தது.

    இதில் அரசின் உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் துணை இயக்குனர் கான் தலைமையிலான குழுவினர் யூனூஸ் (தொழில்நுட்பம்), இந்திய உணவுக் கழகத்தின் உதவி பொது மேலாளர் குணால் குமார், கணேசன் (தரக் கட்டுப்பாடு),

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதல் நிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில் ஆகியோர் இன்று (17.10.22) நேரில் பார்வையிட்டனர்.அப்போது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளிடமும், அலுவலர்களிடமும் கேட்டறிந்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், உடன் சென்று இது தொடர்பான விவரங்களை மத்திய குழுவினரிடம் விவரமாக எடுத்துரைத்தார்.உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.




    • மரக்கன்றுகளை நட்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் கே.பந்தாரப்பள்ளி ஏரிக்கரையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஜல் சக்தி அபியான் திட்டத்தின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான மத்தியக்குழு கண்காணிப்பு அலுவலரும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனருமான தினேஷ் குமார் ராணா பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதன் பிறகு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.

    உடன் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, ஜல் சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் ராஜேஷ் குலதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் சுந்தரபாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ் குமார், பழனிசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×