search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் தொடர்ந்து ஆய்வு
    X

    கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் தொடர்ந்து ஆய்வு

    • நிபா வைரஸ் தொற்றுக்கு முதலில் பலியான நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    • நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதன்முதலாக நிபா வைரஸ் பரவியது. அப்போது நிபா ரைவஸ் தொற்று பாதித்து 17 பேர் பலியாகினர். அதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து இறந்தனர்.

    மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபர் கடந்த மாதம் 30-ந்தேதியும், அயன்சேரி பகுதியை சேர்ந்த நபர் கடந்த 13-ந்தேதியும் பலியாகினர். அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் அந்த நபர்களின் குடும்பத்தினரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

    அதில் நிபா வைரஸ் தொற்றுக்கு முதலில் பலியான நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறையினர் உஷார் அடைந்தனர். நிபா வைரஸ் பாதித்து இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயாரித்தனர்.

    அதில் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சை அளித்தவர்கள் என 168 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அதன்படி கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அயன்சேரி, மருதோன்கரை, திருவள்ளூர், குட்டியாடி, காயக்குடி, வில்லியம்பள்ளி, கவிழும்பாறை ஆகிய 7 ஊராட்சிகளில் 47 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

    கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்லவும், அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தொற்று பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

    நிபா தொற்று பாதித்து இறந்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களாக பட்டியலிடப்பட்டவர்களில் சிலரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர் ஒருவருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள முதலில் பலியான நபரின் 9 வயது மகன், மைத்துனர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடங்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள தாலுகா மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்துவம் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    அதனை நாளை வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் டியூசன் மையங்களும் மூடப்பட்டன. அனைத்து பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த வருகிற 24-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் கேரளா வந்தனர். மத்திய சுகாதாரக்குழுவின் மூத்த ஆலோசகரும், நுண்ணுயிரியல் நிபுணருமான மால சாப்ரா தலைமையிலான 6 பேர் குழு சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கோழிக்கோடு மாலட்ட கலெக்டர் கீதா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    அவர்களிடம் கோழிக்கோடு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினர், தொற்று பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். தொற்று பாதிப்புக்கு உள்ளான மருதோன்கரை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நிபா வைரஸ் தொற்று கண்டறிவதை தீவிரப்படுத்தும் விதமாக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் இருந்து 2 நடமாடும் ஆய்வக வாகனங்கள் கோழிக்கோட்டுக்கு வந்துள்ளன. அதில் நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு நிபா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கேரளாவின் வடக்கு மாவட்டங்களான மலப்புரம், வயநாடு, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    அந்த மாவட்டங்களில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் பார்வையாளர்களை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    மேலும் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறையினருக்கு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×