செய்திகள்

ஊழலில் திளைப்பவர்கள் பா.ஜனதாவை விமர்சிக்க கூடாது: நாராயணசாமிக்கு சாமிநாதன் கடும் கண்டனம்

Published On 2017-10-04 12:50 GMT   |   Update On 2017-10-04 12:50 GMT
ஊழல் மகுடங்களை சுமந்து கொண்டவர்கள் மற்றும் ஊழலில் திளைப்பவர்கள் எல்லாம் பாரதிய ஜனதாவை விமர்சிக்க கூடாது என்று சாமிநாதன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் ஊழல் குற்றச்சாட்டு புகார் எழுந்தாலே சோனியா காந்தி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து விடுவாராம். இப்படி பொய் மூட்டையை நாராயணசாமி அவிழ்த்து விட்டுள்ளார்.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல்களின் போதெல்லாம் சோனியா காந்தி ஊழல் தெரிந்தவுடனே தான் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தாரா? நேரு காலத்திலேயே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் காங்கிரஸ்காரர்கள், ராஜீவ் ஆட்சியில் போபர்ஸ் என்ற ஒரு ஊழலே அவரது ஆட்சியைக் கவிழ்த்துப் போட்டது.

2013-ல் ஹெலிகாப்டர் ஊழலுக்குப் பொறுப்பேற்று அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி பதவியை ராஜினாமா செய்தாரா? அல்லது சோனியா தான் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தாரா? சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் உத்தரவிட்டாரா? பா.ஜ.க. கொடுத்த புகார்களின் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததா இல்லையா?

2ஜி உரிமம் வழங்குவதில் இமாலய ஊழல் செய்த அப்போதைய தி.மு.க.வின் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்ட போது, பிரதமருக்கும் இதில் சம்பந்தம் இருப்பதாக உறுதிபடக் கூறினாரே. பிரதமர் ராஜினாமா செய்தாரா? அல்லது சோனியா தான் வேறு பிரதமருக்கு ஆள் தேடினாரா?

உலக அளவில் விளையாட்டிலும் கூட இந்தியாவில் ஊழல் நடக்கும் என்று அசிங்கத்தைப் பெற்றுத்தந்த காங்கிரஸ்காரர்கள் மீது சோனியாகாந்தி என்ன நடவடிக்கை எடுத்தார்? நரசிம்மராவ் காலத்தில் நடந்த ஹவாலா ஊழல், ஹர்ஹத் மேத்தா ஊழல், மகாராஷ்டிராவில் அசோக்சவான் ஆட்சிக் காலத்தில் நடந்த வீட்டுவசதி துறையில் நடந்த ஊழல் என பல ஊழல்களை பட்டிலிட்டுக் காட்ட முடியும்.

இவற்றில் எல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதா? மருத்துவ மாணவர் சேர்க்கையில் சி.பி.ஐ. வழக்கு வந்த பிறகு அரசுக்கு சம்பந்தம் இல்லை என்கிறார். மல்லாடியைப் பாதுகாக்கிறார். ஊழல் மகுடங்களை சுமந்து கொண்டவர்கள், ஊழலில் திளைப்பவர்கள் எல்லாம் பா.ஜ.க.வை விமர்சிக்க கூடாது.

இவ்வாறு சாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News