‘நீட்’ தேர்வுக்கு எதிராக சென்ட்ரலில் மாணவர் அமைப்பினர் மறியல்
ராயபுரம்:
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் அகில இந்திய மாணவர் கழகம், புரட்சி இளைஞர் கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு திடீரென்று மறியல் செய்தனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியல் செய்ததால் கைது நடவடிக்கையில் இறங்கினர். குண்டு கட்டாக தூக்கி சென்று போலீஸ் வாகனங்களில் ஏற்றினார்கள். மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
‘நீட்’ தேர்வுக்கு எதிராக தங்க சாலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மாணவர்கள் இன்று காலை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்திய மாணவர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
போராட்டம் முடிந்த பிறகு மாணவர்கள் தொழிற் பயிற்சி மையத்திற்கு சென்றனர். அப்போது அவர்களை மையத்துக்குள் அனுமதிக்க நிர்வாகத்தினர் மறுத்தனர். இதனால் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாணவர்கள் நீட் பயிற்சி மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.