திருமங்கலம்-கப்பலூரில் 2 பெண்களை தாக்கி நகை பறிப்பு
பேரையூர்:
மதுரை வைத்தியநாத புரத்தைச் சேர்ந்தவர் முத்து வேலு. இவரது மனைவி ரேவதி (வயது 37). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் மொபட்டில் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் ரேவதி வேலைக்கு புறப்பட்டார். கப்பலூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று ரேவதியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
அப்போது நிலை குலைந்த ரேவதி ரோட்டில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
திருமங்கலம் பாரதி நகரைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி ஜெயலட்சுமி (35). இவர் அதே பகுதியில் உள்ள டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மதியம் ஜெயலட்சுமி சாப்பிட வீட்டுக்குச் சென்றார். கக்கன் காலனி ஓடை அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது அவர் நகையை இறுக்கி பிடித்துக் கொண்டார். ஆனாலும் மர்ம நபர்கள் நகையை பிடித்து இழுத்ததில் 3 பவுன் நகை அவர்கள் கையில் சிக்கியது. நகையுடன் அவர்கள் தப்பினர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.