செய்திகள்

மாணவர்களின் கனவை சவப்பெட்டியில் அடைத்து கடைசி ஆணியையும் அறைந்து விட்டனர்: மு.க. ஸ்டாலின் தாக்கு

Published On 2017-08-22 13:59 GMT   |   Update On 2017-08-22 13:59 GMT
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகள் தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதற்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்ததையடுத்து 3 அமைச்சகங்கள் ஒப்புதலும் அளித்து விட்டன. எனவே, அவசர சட்டத்தற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நீட் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் அவசர சட்ட வரைவை ஏற்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து, நீட் தேர்வின் அடிப்படையில்தான் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என கூறிய உச்ச நீதிமன்றம், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என உத்தரவிட்டது. செப்டம்பர் 4-ம்தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி நீட் மதிப்பெண் அடிப்படையில்தான் தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.



நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு வாங்கித் தர முடியாத தமிழக அரசின் மீது எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மத்திய - மாநில அரசுகள் மாணவர்களின் மருத்துவக் கனவை சவப்பெட்டியில் அடைத்து கடைசி ஆணியையும் அறைந்து விட்டன. இந்தத் துரோகத்தை பெற்றோரும், மாணவர்களும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். மத்திய, மாநில அரசுகளின் நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News