காயல்பட்டினத்தில் பெண் மீது தாக்குதல்: வாலிபருக்கு வலைவீச்சு
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் அலியார் தெருவை சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். இவரது மனைவி சேகு பாத்திமா (வயது40). இவர்களது பக்கத்து வீட்டில் சேகு சுலைமான் மகன் முகம்மது அலி (39). என்பவர் வசித்து வருகிறார். இவர்களின் வீடுகளுக்கு இடையில் காலிமனை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இடத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க முகம்மது அலி குழி தோண்டியுள்ளார். இதனை சேகு பாத்திமா கண்டித்துள்ளார்.
இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முகம்மது அலி மண்வெட்டியால் சேகு பாத்திமாவை தாக்கி குழிக்குள் தள்ளி உள்ளார். இதில் காயம் அடைந்த சேகு பாத்திமா காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து ஆறுமுகநேரி போலீசிடம் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முகம்மது அலியை தேடி வருகின்றனர்.