செய்திகள்

திருவோணம் அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2017-08-16 10:29 GMT   |   Update On 2017-08-16 10:29 GMT
திருவோணம் அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவோணம்:

திருவோணத்தை அடுத்துள்ள நம்பிவயல் சிவக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவர் பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுகன்பாபு (வயது21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அப்போது அவர் தன்னுடன் படிக்கும் நண்பர்கள் 5 பேரையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். இந்நிலையில் அருகிலுள்ள நம்பிவயல் மகாராஜாசமுத்திர காட்டாற்றில் குளிப்பதற்கு நேற்று சுகன்பாபு, தனது நண்பர்கள் 5 பேருடன் சென்றார். அவர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுகன்பாபு ஆற்றுநீரில் அடித்துச்செல்லப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்பாபுவின் நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் சுகன்பாபுவை தண்ணீர் இழுத்து சென்றுவிட்டது. இதனை அறிந்த கிராம மக்களும், பட்டுக்கோட்டை தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகன்பாபுவை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சுகன்பாபுவின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து திருவோணம் இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் (பொறுப்பு) ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News