வேலூரில் தாய்-மகள் உள்பட 3 பேரை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது
வேலூர்:
வேலூர் சாமுவேல்நகரை சேர்ந்தவர் சபிதா (வயது 44). இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு வசூல்செய்த பணத்தை அதே பகுதியில் வசிக்கும் பூங்கொடியிடம் கொடுத்தார். தொடர்ந்து அவர், சிறிதுநேரம் பூங்கொடியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பூங்கொடியின் கணவர் இலக்கியஅரசன் (29), சபிதாவிடம் ‘என் மனைவியிடம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறாய்’ என கேட்டுள்ளார். இதுதொடர்பாக சபிதாவுக்கும், இலக்கியஅரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த இலக்கியஅரசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சபிதாவை வெட்டினார். அதனை தடுக்க வந்த சபிதாவின் மகள் சரண்யா (24), அண்ணன் மகன் பார்த்தி (32) ஆகியோரையும் அவர் கத்தியால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து இலக்கியஅரசனை கைது செய்தார்.