செய்திகள்

நெல்லை அருகே சுமை தூக்கும் தொழிலாளி கார் மோதி பலி

Published On 2017-07-24 08:30 GMT   |   Update On 2017-07-24 08:30 GMT
நெல்லை அருகே சுமை தூக்கும் தொழிலாளி கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரி நெல்லை அருகே மானூர் பகுதியில் வரும்போது திடீரென பழுதானது. இதனால் லாரியை டிரைவர் ஓரமாக நிறுத்தினார். பின்னர் லாரியில் இருந்த கோழி தீவனத்தை வேறு லாரியில் ஏற்றுவதற்கு தாழையூத்தில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்களை வரவழைத்தனர்.

தொழிலாளர்கள் அருகன்குளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது37), அய்யப்பன் உள்ளிட்ட 4 பேர் வந்தனர். அப்போது சுப்பிரமணியனும், அவருடன் வந்த தொழிலாளர்களும் ரோட்டு ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு கார் வேகமாக வந்தது. எதிர்பாராதவிதமாக கார் சுப்பிரமணியன் மீது மோதியது. பழுதாகி நின்ற லாரிமீதும் கார் மோதியது.

பின்னர் கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியனை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News