மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதி 2 பேர் பலி
- 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பூதப்பாண்டி:
பூதப்பாண்டி அருகே முக்கடல் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் அனீஸ் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் சுபின் (21). இருவரும் கூலி தொழிலாளிகள். நேற்று மதியம் இருவரும் பூதப்பாண்டி பகுதியில் உள்ள பழைய ஆற்றில் குளிக்க சென்றனர்.
குளித்து விட்டு மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அனீஸ் ஓட்டினார். சுபின் பின்னால் அமர்ந்திருந்தார். பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அனீஸ், சுபின் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அனீஸ், சுபின் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சுற்றுலா வேன் டிரைவர் கோவில்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (36) மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பலியான அனீஸ், சுபின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் அங்கே திரண்டு இருந்தனர். வாலிபர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.