கோவை கோர்ட்டில் போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்திய காட்சி.
கோவை கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை
- கோவை ரேஸ்கோர்சில் வக்கீல்கள் பயிற்சி மைய அலுவலகம் உள்ளது.
- ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை:
கோவை ரேஸ்கோர்சில் வக்கீல்கள் பயிற்சி மைய அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம் போல் இ-மெயில் தகவல்களை ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு இ-மெயிலில் கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெடித்து சிதற உள்ளது என கூறப்பட்டிருந்தது.
உடனே இதுகுறித்து ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கோவை கோர்ட்டு வளாகத்திற்கு சென்றனர்.
அங்கு அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். நீண்ட நேரம் சோதனைக்கு பிறகு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே இந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய அதே வாலிபர் தான் கோவை கோர்ட்டுக்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.