செய்திகள்

கதிராமங்கலத்தில் பாதிப்புகளை பதியவைக்க மக்கள் போராடுகிறார்கள்: விஜயகாந்த்

Published On 2017-07-22 10:48 GMT   |   Update On 2017-07-22 10:48 GMT
கதிராமங்கல மக்களின் போராட்டம் பாதிப்புகளை பதியவைக்கவே நடைபெறுகிறது என்பதை அரசு உணரவேண்டும் என போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த விஜயகாந்த் பேசினார்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கதிராமங்கலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. குழாயில் கசிவு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் மீத்தேன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராகவும் கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கதிராமங்கலம் மக்களிடம் கருத்து கேட்பதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் இன்று வந்தனர். அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் பேசுகையில் கூறியதாவது:-

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. கச்சா எண்ணெய் எடுப்பதால் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பகுதி மக்களுக்கு தெரியாமல் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற கோரி போராட்டம் நடத்தி கைதான 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வேடிக்கை பார்ப்பதற்காக நான் கதிராமங்கலம் வரவில்லை. பிரச்சனையை தூண்டிவிட்டு போராட்டத்தை பெரிதாக்கவும் நான் வரவில்லை. இப்பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் வந்துள்ளேன். இப்பகுதி மக்களின் போராட்டம் பாதிப்புகளை பதியவைக்கவே நடைபெறுகிறது என்பதை அரசு உணரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது கூறியதாவது:-

தே.மு.தி.க. கட்சி காணாமல் போய்விடும் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் கட்சி தற்போது காணாமல் போய்விட்டது. கதிராமங்கலத்தில் 1000 பெண்கள் ஒன்றுகூடி மாபெரும் சக்தியாக உருவாகி இருக்கிறீர்கள். இந்த சக்தியை மீறி எந்த சக்தியும் ஜெயிக்க முடியாது. நாம் தான் ஜெயிப்போம். மக்களுக்கு பயன்படாத திட்டம் எதுக்கு? அதை தூக்கி எறியுங்கள். கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராடியவர்களை கைது செய்துள்ளனர். அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்.

மீத்தேன் திட்டத்துக்கு எதிராக தே.மு.தி.க. தொடர்ந்து குரல் கொடுக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நாளை கலந்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தின் முடிவில் கதிராமங்கலத்தில் போராடி வரும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு பொன்னாடை அணிவித்தனர்.
Tags:    

Similar News