செய்திகள்

வால்பாறையில் ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்துக்கொன்ற சிறுத்தை

Published On 2017-07-21 11:41 GMT   |   Update On 2017-07-21 11:41 GMT
வால்பாறையில் இன்று அதிகாலை நகராட்சி மார்க்கெட் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டியிருந்த ஆட்டை அடித்துக்கொன்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை வாழைத் தோட்டம், டோபி காலனி, நகராட்சி மார்க்கெட் பகுதியில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்தனர். இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு டோபி காலனியில் சுற்றிய நாயை சிறுத்தை கவ்விச்சென்றது. அதே காலனியில் கன்றுக்குட்டியை அடித்து காயப்படுத்தியது.

இந்நிலையில் இன்று அதிகாலை நகராட்சி மார்க்கெட் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டியிருந்த ஆட்டை அடித்துக்கொன்றது. குரல்வளையை கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்த சிறுத்தை ஆட்டின் உடலை மணிகண்டன் என்பவரது வீட்டின் முன்பு போட்டுச்சென்றது.

ஆட்டை சிறுத்தை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரவியதும் பொதுமக்கள் அச்சத்துடன் ஆட்டின் உடலை பார்த்துச்சென்றனர். இது குறித்து வால்பாறை வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மீண்டும் சிறுத்தை ஊருக்குள் நுழையாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணயில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News