செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

Published On 2017-07-20 03:20 GMT   |   Update On 2017-07-20 03:20 GMT
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி ஒடிசா அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்த தாழ்வு மண்டலம் நேற்றுமுன்தினம் ஒடிசா அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. சென்னையில் நேற்று மாலையில் எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

தமிழகம், புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யக்கூடும். 20-ந்தேதி (இன்று) முதல் 23-ந்தேதி வரையிலான 4 நாட்கள் கடலோர கர்நாடகா மற்றும் உள் கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறு, வால்பாறை, தேவலாவில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக நீலகிரியில் 3 செ.மீ., நடுவட்டம், குழித்துறை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., தக்கலை, பெரியாறு, மயிலாடி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News