செய்திகள்

வத்தலக்குண்டு பகுதியில் தக்காளி- வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

Published On 2017-07-01 12:07 GMT   |   Update On 2017-07-01 12:07 GMT
வத்தலக்குண்டு பகுதியில் தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் தக்காளி மற்றும் வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. பழைய வத்தலக்குண்டு, செக்காபட்டி, கண்ணாபட்டி, விராலிப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் வெங்காயம் மற்றும் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் கருகதொடங்கியது. எனவே வத்தலக்குண்டு மார்க்கெட்டிற்கு தக்காளி, வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

இதன்காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சமையலுக்கு ருசியை கூட்டுவதில் சின்னவெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. நேற்றுவரை கிலோ ரூ.110-க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.130ஆக விலை உயர்ந்துள்ளது.

நாட்டுத்தக்காளி வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது. பெங்களூரில் இருந்து வரும் போண்டா தக்காளி வரத்தும் குறைவாக உள்ளதால் ஒரு கிலோ ரூ.70வரை விற்பனையாகிறது. வெங்காயத்தை உறித்தால்தான் கண்ணீர் வரும். தற்போது அதன்விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது. எனவே இல்லத்தரசிகள் செய்வதறியாது உள்ளனர்.

பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. ஆனால் இதை பிரியாணி மற்றும் ஆம்லெட்களில் மட்டுமே உபயோகிக்கமுடியும் என்பதால் சின்னவெங்காயத்தையே அதிக விலை கொடுத்து வாங்கிச்செல்கின்றனர்.

Tags:    

Similar News