செய்திகள்

சுரண்டை அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

Published On 2017-06-30 12:53 GMT   |   Update On 2017-06-30 12:53 GMT
சுரண்டை அருகே 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போன வழக்கில் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரை அடுத்த கருவந்தா கரையடி மாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி (வயது 40). பனை ஏறும் தொழிலாளி. இவரது வீட்டிற்கு அருகில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன், ஒரு வீட்டில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போயின.

இதுபற்றி வீரகேரளம்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வெள்ளப்பாண்டியிடம் விசாரணை செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டதும் விசாரணைக்கு பயந்து வெள்ளப்பாண்டி தலைமறைவானதாக தெரிகிறது.

இந்நிலையில் ஊருக்கு அருகிலுள்ள தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் வெள்ளப்பாண்டி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி ஊத்துமலை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து வெள்ளப்பாண்டி உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணைக்கு பயந்து வெள்ளப்பாண்டி தூக்குபோட்டு தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்து போன வெள்ளப்பாண்டிக்கு வேலம்மாள் என்ற மனைவியும்,ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

Tags:    

Similar News