வடமதுரை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகில் உள்ள மின்நகர், திடீர்நகர் ஆகிய பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போர்வெல்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த தண்ணீர் கிடைக்காததால் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
கடந்த 1 மாதமாக இந்த தண்ணீரும் வழங்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் உளளாட்சித்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் மனு அளித்தனர். ஆனால் தண்ணீர் கிடைக்க வில்லை.
இதனால் இன்று குஜிலியம்பாறை மின் வாரிய அலுவலகம் அருகே பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எரியோடு இன்ஸ்பெக்டர் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அங்கு சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.