search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman road blocked"

    திருவண்ணாமலையில் குடிநீர்கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகரில் 1 முதல் 7 தெருக்களில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் வேலூர் ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகம் அருகே சாலை மறியல் செய்தனர்.

    சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவலறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், ஊராட்சி செயலாளர் உமாபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சேலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 2 இடங்களில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ளது பருத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்பட பலரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் சேலம்-அரூர் சாலையில் பருத்திக்காடு பிரிவு ரோடு மற்றும் வைதாதனூர் பிரிவு ரோடு ஆகிய 2 இடங்களில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆவேசம் அடைந்த மக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்படுவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறினர். மேலும் வட்டார வளர்ச்சி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் முறையாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் ஆவேசமாக கூறினர்.

    அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து 7 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டடம் 7.40 மணிக்கு கைவிடப்பட்டது. ஆனாலும் கலைந்து செல்லாத மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி வருகைக்காக சாலையோரம் காத்து நின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள காட்டரம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 3 நாட்களாக குடி தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருங்காட்டுகோட்டை - காட்டரம்பாக்கம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்ன லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பின்னர் குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகிக்கப்படுறது.

    சுமார் 25 வருடங்குளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து பெறப்படும் தண்ணீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லாமல் நேரடியாக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேரிட்டி வாக்கம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின் சப்ளை சரியாக இல்லாதால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி இன்று காலை பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சீரான மின் சப்ளைக்கு நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 150-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கீழ்பென்னாத்தூர் சானிப்பூண்டி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்யாறு அருகே உள்ள தண்டரையில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள தண்டரையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் செய்யாறு ஆரணி செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர். இது குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்.

    அப்போது பெண்கள் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறினர். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உரிதியளித்தார்.

    இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடிநீர் வழங்கக் கோரி பழவந்தாங்கல் சுரங்கப் பாதையில் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    பழவந்தாங்கல் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை.

    கடந்த சில தினங்களாக இந்த தெருவில் உள்ள சிந்தடிக் டேங்குகளிலும் தண்ணீர் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பகுதி பெண்கள் இன்று காலை 9 மணி அளவில் பழவந்தாங்கல் ரெயில்வே சுரங்கப்பாதையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் இந்த வழியாக கிண்டி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வேலைக்கு செல்வோரும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிக்குள்ளாயினர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் வர வழைக்கப்பட்டனர். அவர்களிடம் பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    உடனே தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக இந்த பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி இருந்தாலும் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி ஊராட்சிக்குட்பட்டது மாருதிநகர், சத்யாநகர். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீருக்காக பெண்கள் நீண்டதூரம் சென்று அலையும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென காலிகுடங்களுடன் உசிலம்பட்டி-மதுரை மெயின் ரோட்டில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் மதுரை-தேனி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் சம்பவ இடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள பாண்டரவேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதட்டூர் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    ஆரணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேலூர்:

    ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதி பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    குடிநீர் பிரச்சினையை போக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டு மனுக்கள் கொடுத்தனர். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். நகர் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் ஆரணி- வாழப்பந்தல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து, மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தை அடுத்த ஆற்றுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரியப்பாக்கம் காலனியில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதானது. இதுவரை அந்த மின் மோட்டார் பழுது பார்க்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். சுமார் 2 கி.மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது.

    இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊத்துக்கோட்டை- சென்னை நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள முனுகப்பட்டு கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு போர்வெல் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை. இதனால் ஒரு குடம் தண்ணீருக்காக அருகில் உள்ள கிராமங்களை நாடி செல்ல வேண்டிய அவல நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, செய்யாறு ஒன்றிய அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்து வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

    இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆரணி-வாழப்பந்தல் சாலையில் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த வழியாக அரசு டவுன் பஸ்சையும் சிறைபிடித்தனர். அலுவலக நேரம் என்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பெரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மறியலை கைவிட மறுத்த பெண்கள், போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    ×