search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sriperumbudur"

    • கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமார கோவில் திருப்பணி முடிந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி யாகம், கோ பூஜை, லஷ்மி ஹோமம், நவகரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, பிரம்மசுத்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்ட்டது. பின்னர் கைலாய இசை வாசிக்கப்பட்டு கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பி சாமியை வணங்கினர். கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் “கூலிங் அட்டை” தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இன்று காலை 9 மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென்று தீ பற்றி எரிந்து. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியில் ஓடிவந்தனர்.

    தீ விபத்து பற்றி அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், காஞ்சிபுரம், ஆகிய பகுதியில் இருந்து 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தொழிற்சாலையில் தீப்பிடித்ததும் ஊழியர்கள் வெளியே வந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை, ஆண்டார் குப்பம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 49). ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடகால் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் இரவு பணிக்கு செல்லும் போது கம்பெனியில் உள்ள அறையில் தங்குவது வழக்கம்.

    நேற்று இரவு விஜய் வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்களுடன் அங்குள்ள அறையில் தூங்கினார்.

    அதிகாலையில் தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது விஜய் மாயமாகி இருந்தார். அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கம்பெனி அருகில் உள்ள குப்பை மேட்டில் விஜய் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விஜய் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து உடலை எரித்தனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

    இதேபோல் விஜய்யுடன் கடைசியாக இருந்தவர்கள் யார்-யார்? யாருடனும் மோதல் உள்ளதா? என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

    சென்னை தொழிலாளி குப்பைமேட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள காட்டரம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 3 நாட்களாக குடி தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருங்காட்டுகோட்டை - காட்டரம்பாக்கம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்ன லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மேற்கு தாம்பரம் கேப் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வின் (58). தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் போன் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

    நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அலுவலகத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் செல்வின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார். விபத்தில் இறந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் செல்வினுக்கு ஜெயராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூரில் திமுக பிரமுகர் தொழில் போட்டியில் கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). இவர் பழைய கார் வாங்கி விற்பது, கம்பெனி, தொழிற்சாலைகளில் கழிவுகளை வாங்கி விற்பது மற்றும் கட்டுமான தொழில் செய்து வந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு சங்க இயக்குனராக பதவி வகித்து வந்தார். மேலும் தி.மு.க.வில் பிள்ளைப்பாக்கம் ஊராட்சி செயலாளராகவும் இருந்தார்.

    இவரது அலுவலகம் அதே பகுதி ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் உள்ளது.

    நேற்று மதியம் ரமேஷ் அலுவலகத்தில் இருந்தார். அப்போது 3 ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அலுவலகத்துக்குள் புகுந்து ரமேசை வெட்டிக் கொலை செய்து தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில் அலுவலக ஊழியர் பார்த்திபனுக்கும் கையில் வெட்டு விழுந்தது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தொழில் போட்டி காரணமாக ரமேஷ் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தொழிற்சாலையில் பழைய பொருட்களை எடுப்பது தொடர்பாக ரமேசுக்கும், சிலருக்கும் இடையே ஏற்கனவே தகராறு உள்ளது.

    எனவே இதில் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் கூலிப்படையை ஏவி ரமேசை கொன்று இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக கிளாப் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியை தேடி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் போதை பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலி யஸ்சீசர், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர், அப்போது பெரிய மூட்டையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மூட்டையில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஆந்திர மாநிலம் குடிமண்டலம், சேக்லாம்பட்டியை சேர்ந்த கந்துலாபாப்பாராவ் என்பது தெரியவந்தது.

    ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கேரளாவுக்கு கடத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து கந்துலா பாப்பாராவை போலீசார் கைது செய்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    திருவள்ளூர் தாலுகா போலீசார் பட்டரைப் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பிடிபட்ட வாலிபர் வைத்திருந்த பையில் போதைப் பொருளான கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #DenguFever

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பிளைப்பாக்கம் ஊராட்சி பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (வயது 27). இவருக்கு கடந்த 4-ந் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த ஜோசப்(37) என்பவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பிள்ளைப் பாக்கத்தில் மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ முகாம் அமைத்து வீடு வீடாக சென்ற பரிசோதனை செய்து வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி உள்ளனவா என கண்டறிந்து அதை அழித்தல், ஊராட்சி முழுவதும் பிளிச்சிங் பவுடர் தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுத்தல், புகை மருந்து அடித்து கொசுவை அழித்தல், அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கி காய்ச்சலை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா சீனிவாசன் ஆகியோர் பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசு உற்பத்தி நிலைகண்டறிந்து 3 வீடுகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். #DenguFever

    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    அரக்கோணத்தை சேர்ந்தவர்கள் திருமலை (வயது 24), ரகுமான் (25). நண்பர்களான இருவரும் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    தினமும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    நேற்று இரவு அவர்கள் வேலைக்காக ஸ்ரீபெரும்புதூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    நாவலூர் அருகே ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் நெடுஞ்சாலையில் வந்த போது, பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த திருமலை சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ரகுமான் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    அவரை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுமான் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விபத்து நடந்த இடம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதனை வைத்து விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூரில் லாரியில் கடத்தி வந்த ரூ. 20 லட்சம் குட்கா பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GudkhaSeized

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்த மினி லாரி நிற்காமல் சென்றது. போலீசார் அதனை விரட்டிச்சென்றனர். உடனே லாரியை டிரைவர் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 145 பெட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் ஆகும். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். #GudkhaSeized

    ×