கம்பத்தில் கர்ப்பிணி பெண் மர்ம மரணம்
கம்பம்:
கம்பம் 30-வது வார்டு டி.டி.வி.தினகரன் நகரை சேர்ந்தவர் ராம்குமார். கட்டிட தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி பிரியா(வயது22). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பூமிகாஸ்ரீ(3) என்ற பெண்குழந்தை உள்ளது. தற்போது பிரியா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
சம்பவத்தன்று ராம்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தையை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு பிரியா மட்டும் தனியாக இருந்தார். பிரியாவின் தம்பி அங்கு சென்று பார்த்தபோது துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிரியா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி பிரகாஷ் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பிரியாவின் உடலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆவதால் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். பிரியா தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.