செய்திகள்

ரம்ஜான் நோன்புக்காக பள்ளி வாசல்களுக்கு 4900 மெட்ரிக் டன் அரிசி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

Published On 2017-05-24 07:13 GMT   |   Update On 2017-05-24 07:13 GMT
இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 4900 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க ஜெயலலிதா ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டார்.

கடந்த ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, 4900 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடையும்.
Tags:    

Similar News